Monday, October 1, 2012

காந்திக்கு நோபெல் பரிசு மறுக்கப்பட்டது ஏன்?

      இந்தப் பதிவை நான் எழுதும் நாள் 2012 அக்டோபர் 2, அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாள். அகிம்சை என்ற ஒரே ஆயுதத்தை கொண்டு இங்கிலாந்திடம் இருந்து இந்தியாவுக்கு ( பாகிஸ்தான், பங்களாதேஷயும் சேர்த்துதான்) சுதந்திரம் வாங்கி தந்தவரின் நன்நாள். இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கான மக்கள் ஜப்பானிலும், ஐரோப்பியாவிலும் செத்து மடிந்த தருணத்தில் அமைதியான முறையில்ஆயுதம் இன்றி போராடியவர். அப்படிப்பட்ட அந்த மகானுக்கு இன்றுவரை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஆச்சரியம்தான்..!!! ஆனால் உண்மை.!!!


இதுவரை ஐந்து முறை 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில்  காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசியில் கிடைக்கமால் போனதுதான் மிச்சம். காந்தியின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வாழ்ந்த மக்கள் 1930 ஆம் ஆண்டு “இந்தியாவின் நண்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் முயற்சியால் 1937 ஆம் ஆண்டு முதல் முறையாக காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் Ole Colbjørnsen என்பவரால் பரிந்துரைக்கப்படுகிறது. மொத்தம் 13 பெயர்கள் காந்தியுடன் சேர்த்து இறுதி பட்டியலுக்கு தெரிவுசெய்யப்படுகிறது. நோபல் கமிட்டி Professor Jacob Worm-Müller என்பவரை காந்தியை பற்றிய விரிவான அறிக்கை தரும்படி கேட்டுக்கொள்கிறது. அவர் தன்னுடைய அறிக்கையில் காந்தியின் அகிம்சை மற்றும் அவருடைய கோட்பாடுகளை பாராட்டிய அதே நேரத்தில் கீழ் கண்ட இரண்டு விஷயங்களை காந்திக்கு பாதகமாக தெரிவிக்கிறார். இது 1937 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அறிக்கை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

1)       காந்தி இந்தியாவிலும், தென் ஆப்ரிக்காவிலும் அநீதிக்கு எதிராக போராடியிருந்தாலும் அந்த போராட்டம் இந்தியர்களுக்காக மட்டுமே இருந்தது. தென் ஆப்ரிக்காவில் அவர் இந்தியர்களுக்காக போராடிய அதே நேரத்தில் கருப்பின மக்கள் அடிமைகளாகவும் இந்தியர்களைவிட இன்னும் மோசமான நிலையிலும் இருந்தனர். காந்தி அவர்களுக்காக எந்தவிதமான தீவிர போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எனவே இவரை ஒரு உலக அளவிலான போராட்ட தலைவராக கருதமுடியாது, ஒரு தேசிய அளவிலான தலைவராக மட்டுமே கருத முடியும்.

2)       காந்தி அகிம்சை போராட்டத்தை தம் மக்களுக்கு வழி காட்டிய போதிலும் அவருடைய தொண்டர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சவுரி சாரா என்ற ஊரில் ஒரு காவல் நிலையத்தை காவல் அதிகாரிகளை உள்ளே வைத்து எரித்து கொன்றனர் (இந்த சம்பவம் காந்தி திரைப்படத்திலும் காட்டப்படும்).   

மேற் சொன்ன இரண்டு காரணங்களினால் அந்த ஆண்டு காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டு Lord Robert Cecil என்ற இங்கிலாந்து நாட்டவருக்கு வழங்கப்படுகிறது. Ole  Colbjørnsen மீண்டும் 1938 மற்றும்1939 ஆண்டுகளில் மறுபடியும் காந்தியின் பெயரை பரிந்துரை செய்கின்றார். ஆனால் அப்போதும் வழங்கப்படவில்லை.

அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு மறுபடியும் காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. இம்முறை இந்தியாவிலிருந்து தபால் தந்தி மூலம் பாம்பே முதல் மந்திரி கோவிந்த் பல்லாப் பந்த் மற்றும் சபாநாயகர் மவலாங்கர் நோபல் கமிட்டிக்கு காந்தியின் பெயரை பரிந்துரைக்கின்றனர். வழக்கம் போல நோபல் கமிட்டி காந்தியை பற்றிய அறிக்கை தரும்படி இம்முறை வரலாற்று பேராசிரியர் Jens Arup Seip என்பவரை கேட்டுக்கொள்கிறது. அப்போதுதான் இந்தியா சுதந்திரம் பெற்று பாகிஸ்தான் பிரிந்து பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தும் அகதிகளாக துரத்தப்பட்டும் துயர சம்பவங்கள் நடந்தேறின. இதை பேராசிரியர் Jens Arup Seip தன் அறிக்கையில் குறிப்பிட்டு காந்தியால் அல்லது காந்தியின் தொண்டர்களால் இதை தடுக்க இயலாமல் போய்விட்டது என்று குறிப்பிடுகிறார்.

அந்த ஆண்டு இறுதி பட்டியலுக்கு வந்த 6 பெயர்களில் நோபல் கமிட்டியில் இருந்த அனைவரும் காந்தியின் பெயரை தேர்வு செய்ய, Martin Tranmæl மற்றும் Birger Braadland என்ற இரண்டு பேரும் நிராகரித்து விட்டனர். அவர்கள் சொன்ன காரணம்: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை கலகத்தால் நேர்ந்த உயிர் இழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம், மேலும் இப்போது காந்திக்கு இந்த விருதை கொடுத்தால் அது இந்தியா-பாகிஸ்தான் உறவை இன்னும் சீர்குலைக்கும். ஆக 1947-லிலும் நோபல் பரிசு காந்திக்கு நிராகரிக்கப்பட்டு American Friends Service Committee என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டே 1948-ல் மீண்டும் காந்தியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இறுதி பட்டியலுக்கு தெரிவுசெய்யப்படுகிறது. இம்முறை காந்தியுடன் சேர்த்து மொத்தமே மூன்று பெயர்கள்தான் உள்ளன. இம்முறையும் பேராசிரியர் Jens Arup Seip காந்தி பற்றிய அறிக்கையை நோபல் கமிட்டியிடம் சமர்பிக்கின்றார். ஒருமனதாக அனைவரும் காந்தியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்கின்றனர். அதிகார பூர்வமான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கவுள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுகின்றார்.நோபல் கமிட்டின் சட்ட விதிகளின் படி இறந்து போனவருக்கு வழங்க முடியாது. கீழ் கண்ட சட்ட விதிகளின் படி இறந்து போனவருக்கு நோபல் கமிட்டி வழங்க முடியும்,

1)     இறந்து போனவர் தன் வாரிசை சட்டப்படி உயில் எழுதி தெரிவித்து இருந்தால் அவர் வாரிசுக்கு வழங்கப்படும்.
2)     இறந்து போனவர் ஏதாவது கட்சியின் அல்லது நிறுவனத்தின் தலைவராக இருந்தால் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

ஆனால் காந்தி உயிலும் எழுதி வைக்கவில்லை, எந்த கட்சியோ அல்லது நிறுவனத்தின் தலைவராகவோ அந்த சமயத்தில் இல்லை. இறுதியாக நோபல் கமிட்டி அந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கவில்லை.

(தகவல்  ஆதாரம் : http://www.nobelprize.org)

Friday, June 1, 2012

இளையராஜாவின் ரசிகன்


இந்த உலகில் பல வகையான ரசிகர்கள், இசை ரசிகர், கிரிக்கெட் ரசிகர், சினிமா ரசிகர், உணவு ரசிகர் இப்படி பல வகை. அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுக்கு ரசிகராக இருந்திருப்போம், பின் மாறி இருப்போம் அல்லது இன்னும் ரசிகராக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் எதற்கு ரசிகராக இருக்கிறாரோ அதை வைத்து அவருடைய ரசனையை எடை போடுகிறோம். உதாரணமாக நடிகர் விஜயகாந்த், ராமராஜன் ரசிகர் என்றால் ஒரு விதமாகவும், உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் டைரக்டர் மணிரத்தினம் ரசிகர் என்று சொல்பவரை வேறு விதமாகவும் நினைக்கிறோம்.ஆனால் இந்த “ரசிகன்” என்ற வார்த்தையில் அதன் ஆழம் தெளிவாக தெரிவதில்லை. தீவிர ரசிகன், வெறியன், உயிர் ரசிகன் போன்ற வார்த்தைகள் மூலம்தான் எவ்வளவு தீவிரமான, ஆழமான ரசிகன் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

  அப்போது சேலத்திற்கு அருகில் இருக்கும் தொளசம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தோம். மாலை சுமார் 6.30 மணி, ஒரு தாய் தன் இடுப்பில் கை குழந்தையை சுமந்து கொண்டு வேர்க்க விருவிருக்க ஓடிகொண்டிருக்கிறார், அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் வேகமா ஓடுகிறார்கள். அந்த குழந்தைக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ஏதும் ஆபத்தா? என்ன அவசரம்? ஒன்றும் புரியவில்லை, பின்னர் தெரிந்தது “நாளை நமதே” எம்ஜியார் படத்தை பார்க்க டூரிங் டாக்கீஸ்க்கு ஓடினார்கள் என்பது. எம்ஜியாருக்கு இருந்த ரத்தத்தின் ரத்தங்களுடைய நடவடிக்கையோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் நான் பார்த்து வியந்த முதல் நிகழ்ச்சி அது.

  அமெரிக்கா வந்த பின்பு சம்பரதாயமாக எல்லோரையும் போல் நியூ யார்க்கில் சுதந்திர தேவி சிலையை (Statue Of Liberty) பார்க்க கப்பலில் போய் கொண்டிருந்தேன். அந்த கப்பல் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகள் கையில் கேமராவுடன் அலைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் அரசியல்வாதி ஒருவர் தூய கதர் ஆடையில் அவருடைய அடி பொடிகள் ஐந்து ஆறு பேருடன் பந்தாவாக அலைந்து கொண்டிருந்தார். வழக்கம்போல நிறைய சீனா டூரிஸ்ட்கள் சிங்-சாங்-சூங் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒருவர் ஜப்பானோ, கொரியாவோ தெரியவில்லை தன் girl friend -யை வித விதமாக Nikon-ல் சுட்டுக்கொண்டிருந்தார்.என்னை பார்த்தவர் நேராக என்னிடம் வந்து “ஹாய்” சொன்னார்.

“நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?” என்றார்
“ஆம்” என்றேன்
“இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்? என்றார்
“தென் இந்தியா, சென்னை அருகில்.. “ என்றேன்
 “நான் dancing king-ன் hard core fan”  என்றார்.
“dancing king..??? “ என்று இழுத்தேன்.
“Mr.ரஜினிகாந்த்” என்றார், சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார்
“அவருடைய படத்தை பார்த்த பிறகு தீவிர ரசிகர்களாகிவிட்டோம் , Mr.ரஜினிகாந்தை நேராக பார்க்கவேண்டும் என்று எனக்கும் என் girl friend -க்கும் மிகவும் ஆசை, ஜப்பானில் இருந்து கிளம்பி நேராக சென்னை வந்தோம், கோடம்பாக்கம் சென்று பார்த்தோம், ஆனால் அப்போது Mr.ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் பார்க்க முடியவில்லை. முத்து படத்தில் bad characheter செய்த நடிகரை (பொன்னம்பலம்) பார்க்க முடிந்தது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம்” என்று சொல்லிவிட்டு அவரும், அவருடைய girl friend என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எனக்கு அன்று Statue Of Liberty யை விட அவர்கள் அதிசயமாக தெரிந்தார்கள்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஆபீஸ் விஷயமாக ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் நகரில் இருந்தேன். அன்று மதியம் வேக வேகமாக எல்லோரும் வேலையை முடித்துவிட்டு அந்த பெரிய conference hall-ல் கூடினார்கள். இஷ்டம் போலஅனைவருக்கும் பீர் வழங்கப்பட்டது. பெரிய டிவியில் ஜெர்மனியும்  கானாவும் (Ghana)  விளையாடும் கால் பந்தாட்டம் தொடங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி வென்றது. வெளியே வந்தால் ஒரே கூச்சல், சப்தம், ஆரவாரம். எங்கு பார்த்தாலும் போலீஸ், எல்லா கார்களிலும் ஜெர்மனி கொடி பறக்க ரசிகர்கள் ஹான்க் செய்து கொண்டு பறந்தார்கள். இத்தனைக்கும் அது உலக கோப்பைக்கான Semi Final-தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் என்னுடைய ஹோட்டலுக்கு வர முடிந்தது. முதன் முதலாக தீவிரமான, உணர்ச்சிமயமான, பெரும் திரளான ரசிகர்களை அன்று பார்த்தேன்.

  Grand Rapids-ல் வசிக்க தொடங்கிய பிறகு அவரை பொதுவான பல party- களில் பார்த்திருக்கிறேன். மிகவும் நேர்த்தியாக உடை அணிந்திருப்பார், மிகவும் அமைதியாக நிதானமாக பேசுவார். புதிதாக வந்திருக்கும் அனைத்து Electronic Gadgets பற்றி தெரிந்து வைத்திருப்பார். Music Systems, Audio Speakers, iPad பற்றிய ஆலோசனைகளை நண்பர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் நெருங்கிய நண்பரானார். ஒரு நாள் வீட்டுக்கு அழைத்தார், சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். வாருங்கள் basement-க்கு போலாம் என்று கூப்பிட்டார். அவருடன் சென்றேன், கீழே studio போல ஒரு ரூம் கட்டியிருக்கிறார். கதவை திறந்து உள்ளே சென்றவுடன் கண்ணில் முதலில் படுவது மிகவும் அழகாக silhouette-ல் frame செய்யப்பட்ட இளையராஜாவின் படம். விதவிதமான Audio Speakers மற்றும் equipment கள்.நான் ஆச்சர்யமாக பார்க்க,
 “ஒரு பாட்டு போடுகிறேன்.. கேளுங்கள், படம் பேரு பட்டா கத்தி பைரவன்” என்றார்.
பட்டா கத்தி பைரவனா? பேரே ஒரு மாதிரி பயமா இருக்கே, என்ன ரசனையோ என்று மனதில் நினைத்துக் கொண்டு
“ஓகே.. கேட்போம்..” என்றேன்.Play பட்டனை அமுக்கினார்,
“எங்கெங்கே செல்லும் என் எண்ணங்கள்..”  SPB யும், ஜானகியும் பாட ஆரம்பித்தார்கள்.
வாவ்..!!! அதை சொல்ல, அந்த அனுபவத்தை விபரிக்க வார்த்தை இல்லை. இந்த பாட்டை இதற்கு முன் கேட்டிருக்கிறேன், ஆனால் அவருடைய அந்த ஆடியோ சிஸ்டத்தில் கேட்கும் சுகமே தனி. ஒரு அதி தீவிரமான இளையராஜாவின் ரசிகரை அன்று கண்டுகொண்டேன். இளையராஜா இசை அமைத்து இன்னும் வெளி வராத படங்களை தவிர அனைத்து படங்களின் ஒரிஜினல் இசை தட்டுக்களும் அவரிடம் உள்ளன. இளையராஜா இசை அமைத்திருந்தால் மட்டுமே அவருடைய ஆடியோ சிஸ்டத்தில் இசைக்கப்படும், இல்லாவிட்டால் அனுமதி கிடையாது. சலங்கை ஒலி, அலைகள் ஓய்வதில்லை, பிரியா, தங்க மகன், How To Name It, நந்தலாலா BGM, நான் கடவுள் என்று தொடர்ந்து பல மணி நேரம் ராஜாவின் இசை ராஜாங்கத்தை நடத்தி காண்பித்தார். அந்த இசை மழையில் நனைந்து, மூழ்கி திளைத்து கடைசியாக வீடு திரும்பும் போது நானும் ஒரு தீவிர இளையராஜா ரசிகனா மாறியிருந்தேன்..!!

Saturday, May 26, 2012

AIR INDIA: ஒரு காமெடி நிறுவனம்.


"எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" என்ற பழ மொழிக்கு உதாரணமாக இந்திய அரசு நடத்தி வரும் பல நிறுவனங்களில் முதலிடம் வகிப்பது Air India.கடந்த இருபது நாட்களாக இந்த நிறுவன pilot-கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதில் இந்தியாவிலிருந்து நியூ யார்க், சிகாகோ, லண்டன் மற்றும் பல வெளிநாடு செல்லும் விமான சேவையும் அடங்கும். இதனால் தினமும் பல கோடி ரூபாய்கள் வருமான இழப்பு மற்றும் ஏகப்பட்ட நஷ்டம். புதிதாக வாங்க உள்ள Dream Liner விமான பயிற்சிக்கு Air India வை சேர்ந்த பைலெட்களுக்குதான் முன்னுரிமை தரவேண்டும், merge செய்யப்பட்ட Indian நிறுவன பைலெட்களுக்கு அல்ல என்பதுதான் பிரச்சனை.

இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒதிக்கி வைத்து விட்டு, முதலில் அடிப்படை விஷயத்திற்கு வருவோம்.எத்தனையோ கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில் Rs.42,570 கோடி ரூபாய் கடனிலும், Rs. 22,000 கோடி ரூபாய் நஷ்டத்திலும் ( கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை சுகாதார வசதிகளுக்கு செலவழித்ததை விட இரு மடங்கு தொகை இது..!!!)
இந்த நிறுவனத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? நம் மனதில் எழும் கேள்விகள் இவைதான்,

1.வேறு தனியார் யாருமே நடத்த விரும்பாமல், தயாராக இல்லாமல் இந்த நிறுவனத்தை அரசு நடத்துகிறதா?
2.அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற தண்ணீர், மின்சாரம், கல்வி,மருத்துவம் போல இதுவும் அத்தியாவசியமான ஒன்றா?
3.ISRO (Indain Space Research Organisation) போல செலவு பிடிக்கும் அதே சமயம் ரகசியங்கள் நிறைந்த துறையா?
4.கோடானு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் எத்தனை பேருக்கு இதனால் பயன்?

இதைப் பற்றி எதையும் யோசிக்காமல் மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ய எப்படி முடிகிறது? இதற்கு தனியாக மத்திய அரசில் ஒரு துறை, அதற்கு ஒரு அமைச்சர், அந்த துறையில் பல ஆயிரம் பேருக்கு வேலை, கடைசியில் ஒவ்வொரு வருஷமும் பல கோடி நஷ்டக் கணக்கு.

இன்றைய உலக பொருளாதார நிலையில், பெட்ரோல் விலை தாறு மாறாக எகிறும் சூழ்நிலையில், மிகவும் கடினமான போட்டி நிறைந்த Air Line Travel தொழிலில்,அதுவும் சிங்கபூர் Air Lines போன்ற ஜாம்பவான்களே தடுமாறும்போது இந்திய அரசு தொடர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவதை பார்க்கும் போது அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று வரும் பயணிகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் IT மற்றும் அதை சார்ந்த தொழில் செய்பவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்கள் அதிகம் வாழும் நகரங்கள் என்றால் பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத். இன்று வரை இந்த நகரங்களில் இருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை Air India-வால் இயக்கப் படுவதில்லை. மும்பை அல்லது நியூ டெல்லி சென்று அங்கு பல மணி நேரம் காத்திருந்து வேறு விமானம் பிடிக்க வேண்டும். அதே சமயம் Air France, Lufthansa , British Airways போன்றவை இந்த நகரங்களில் இருந்து நேரடி விமான சேவையை செய்கின்றன.

ஆகஸ்ட் 2011-ல் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒரு சட்டம் இயற்றியது, அதன்படி அமெரிக்காவுக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர விபரம், தாமதமானால் அதன் விபரம், டிக்கெட் வரி விபரம், பயணிகள் எத்தனை பெட்டிகள் எடுத்து வரலாம், அதன் எடை, நீள அகலம போன்ற விபரங்களை பயணிகளுக்கு மிக தெளிவாக அந்தந்த விமான நிறுவனத்தின் Web Site-ல் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும், தவறினால் $80,000 அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் 2012 மே மாதம் 5 ஆம் தேதி $80,000 (Rs. 43,20,000) அபராதம் விதிக்கப்பட்ட ஒரே ஒரு விமான நிறுவனம் Air India மட்டுமே. அதுவும் திடீரென அபராதம் விதிக்கப்படவில்லை, சில பல warrnings கொடுத்து அதை சற்றும் சட்டை செய்யாமல் இருந்த பின்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணம் எங்கிருந்து வரப்போகிறது? இந்திய மக்களின் வரிப் பணத்தில் இருந்துதானே?

சரி என்ன செய்வது.. சூப்பர் ஸ்டார் டயலாக்கை சொல்லி முடிக்க வேண்டியதுதான்

"ஆண்டவனே வந்தாலும் Air India வை காப்பாத்த முடியாது..!!!"

Sunday, May 13, 2012

அன்னக்கிளியும் ஸ்வர்ணாம்பிகையும்


அன்னக்கிளி என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இசைஞானி இளையராஜாவின் முதல் படம் என்பதுதான், ஆனால் 1975 -1985 களில் தொளசம்பட்டியில் வாழ்ந்த மக்களுக்கு ஞாபகம் வருவது
ஸ்வர்ணாம்பிகைதான்.சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பிரதான சாலையில், ஓமலூர் தாண்டியதும் கொஞ்ச தூரத்தில் உள் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தூரம் சென்றால் வரும் ஊர்தான் தொளசம்பட்டி.
கிட்டத்தட்ட பாரதிராஜாவின் படங்களில் வருவதுபோல அழகான ரயில்வே ஸ்டேஷன், புளிய மரங்கள் அடர்ந்த நிழலில் ஞாயிற்று கிழமை கூடும் சந்தை, ஊர் நடுவே ஒரு பெருமாள் கோயில், அதைச் சுற்றி சின்ன சின்னதெருக்கள். தினம் ஐந்து முறை சேலத்திலிருந்து வந்து போகும் ரத்னா சினிமா ஸ்டுடியோக்காரருக்கு சொந்தமான ஸ்வர்ணாம்பிகை என்ற ஒரே ஒரு பஸ். என்னதான் "ஸ்வர்ணாம்பிகை" என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தாலும் தொளசம்பட்டி மக்கள் வைத்த பெயர் "நம்மூரு வண்டி".

பச்சையும் வெள்ளையும் பட்டை பட்டையாக அடிக்கப்பட்ட அந்த நம்மூரு வண்டிதான் கைத்தறி நெசவாளர்கள் நெய்த புடவையை விற்க ஈரோடு, சேலம் செல்வதற்கும், பள்ளிக்கூட வாத்தியார்கள் வெளியூரிலிருந்து வந்து போவதற்கும், கல்யாண பண்டிகை நாட்களில் சொந்த பந்தங்கள் வந்து போவதற்கும் உதவியாக இருந்தது. ஸ்வர்ணாம்பிகை இரவு 8 மணிக்கு கடைசி ட்ரிப் சேலத்திலிருந்து வந்தால் மறுநாள் காலை 4.30 மணிக்குத்தான் முதல் ட்ரிப் சேலம் கிளம்பும். வேலை விஷயமாக சேலம் டவுனுக்கு போய்விட்டு திரும்பும்போது பஸ் ஸ்டாண்டில் நிறைய ATC (அன்றைய Anna Transport Corp.) பஸ்களுக்கு நடுவில் ஸ்வர்ணாம்பிகையை பார்த்தவுடன் சொந்த வீட்டுக்கே வந்தது போல சந்தோசம் வரும். மணி இப்ப என்ன? என்று கேட்டால் தொளசம்பட்டியில் நிறைய பேர் நம்மூரு வண்டி போயி கால் மணி ஆவுது என்பார்கள், நாம்தான் யூகித்துக் கொள்ளவேண்டும்.இப்படி அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகிவிட்ட ஸ்வர்ணாம்பிகையை பற்றி ஒரு நாள் அந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது.

அம்பாயிர முதலியார் எப்பொதும் சாயங்காலம் போல எங்கள் வீட்டுப் பக்கம் வந்து கொஞ்ச நேரம் பழங் கதைகளை பேசிவிட்டு போவார். அவர் மேட்டூர் அணை கட்ட வெள்ளைக்காரன் கிட்ட கூலி வேலை பார்த்தது,காமராஜர் மாட்டு வண்டியில வந்து சுதந்திர பிரச்சாரம் செய்தது என்று அவருடைய சின்ன வயதில் நடந்த விஷயங்களை சொல்வார். அவர்தான் முதன் முதலில் அந்த செய்தியை எங்களுக்கு சொன்னார்.

"தெரியுமா சேதி? புதுசா ஒரு படம் வந்திருக்குதே அன்னக்கிளின்னு, சேலத்துல ஓரியண்டல் கொட்டாயில ஓடுதாம்..!! பாட்டெல்லாம் நல்லாயிருக்குது, ரேடியோ பொட்டியில அந்த படத்து பாட்டயேதான் போடறான்..அந்த படத்துல நம்மூரு வண்டியும் நடிச்சு இருக்குதாம்..ரத்னா ஸ்டுடியோலதான் படமே எடுத்தாங்களாம், அவங்க பஸ்தான நம்மூரு வண்டியும், அதுவும் 2 , 3 சீன்ல வருதாம்..!!"

இதை கேள்விப்பட்ட பலபேரும் அன்னக்கிளியில் வரும் ஸ்வர்ணாம்பிகையை பார்க்க சேலத்திற்கு அதே ஸ்வர்ணாம்பிகையில் சென்றோம். படம் ஆரம்பித்த உடனே "நன்றி ரத்னா ஸ்டுடியோ" என்று காண்பித்தார்கள்.எங்களுக்கு நம்பிக்கை வந்தது ஸ்வர்ணாம்பிகையை பார்த்து விடுவோம் என்று. படம் தொடர்ந்து ஓடியது. அம்பாயிர முதலியார் சொன்னது நிஜம்தான், முதன் முதலில் ஊருக்கு வரும் சிவக்குமார் பொட்டியுடன் ஸ்வர்ணாம்பிகை பஸ்ஸில் இருந்து இறங்குவார். படம் பார்த்த எல்லோரும் திருப்தியுடன் ஊர் திரும்பினோம்.பள்ளிக் கூடத்தில் அன்னக்கிளி படம் பார்த்ததும் அதில் வரும் ஸ்வர்ணாம்பிகையை பார்த்ததும் பசங்களிடம் ஒரே பேச்சாக இருந்தது.

சில வருடங்களில் PNR,NT,ABT என்று தனியார் பஸ்கள் தொளசம்பட்டி வழியாக சேலத்திற்கும் மேட்டூருக்கு இடையே போக ஆரம்பித்தன என்றாலும் நம்மூரு வண்டி மீதான பாசம் மக்களுக்கு குறையவில்லை.
அதன்பின் ஒருநாள் தொளசம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் ஒரே கூட்டம், கிட்டத்தட்ட ஊர் மக்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள்.எல்லோரும் எதையோ எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் சிகப்பு கலரில்
வாழை மரமெல்லாம் கட்டி சந்தனமெல்லாம் தெளித்து ஒரு புத்தம் புது பஸ் சர்ர் என்று வந்து நின்றது. அதன் போர்டில் "S2 - சேலம் ஜங்ஷன்" என்றும், பஸ்ஸின் சைடில் "அண்ணா போக்குவரத்து கழகம்" என்றும் எழுதி இருந்தது.

"இதாம்பா டவுன் பஸ்ஸாம்..!!"

'நம்மூரு வண்டியவிட சார்ஜ் கம்மியாம்.."

"எம்ஜியாரு இந்த வண்டிய உட சொன்னாராம்.."

"இரும்பால வழியா சீக்கரம் போயிடுமாம்"

என்று மக்கள் பலரும் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். அந்த பஸ் டிரைவர்க்கும் கண்டக்டர்க்கும் ராஜா மரியாதை கிடைத்தது.எல்லோரும் S2 வில் போக துடித்தார்கள். இன்னும் சில வருடங்களில் நிறைய தனியார் பஸ்களும், அரசு டவுன் பஸ்களும் விடப்பட்டன.ஸ்வர்ணாம்பிகை ஐந்து ட்ரிப்பில் இருந்து மூன்றாக குறைத்துக்கொண்டது. அதன் பெயரும் ஸ்வர்ணாம்பிகையிலிருந்து ரத்னகுமார் என்று மாறியது. ஆனாலும் அதை எல்லோரும் நம்மூரு வண்டி என்றே அழைத்தார்கள். ஒரு நாள் வழக்கம் போலஅம்பாயிர முதலியாரே அந்த செய்தியை சொன்னார்

"வர்ற ஞாயித்து கிழமையோட நம்மூரு வண்டிய நிறுத்தபோறாங்களாம். இன்னம தொளசம்பட்டிக்கு வராதாம், பொட்டிக்கட மாணிக்கம், சிவலிங்கம் இன்னு எல்லாரும் சேந்து ஊர் பொது மக்கள் கிட்ட கையெழுத்து வாங்கி
கலெக்டர்க்கு மனு அனுப்ப போறாங்களாம். ஊருக்கு மொத மொத வந்த வண்டிய நிறுத்த கூடாது அப்படின்னு கேட்டுக போறாங்களாம்.." என்றார்.

அந்த ஞாயித்து கிழமையும் வந்தது, நம்மூரு வண்டி மாலை 4.30 மணிக்கு தனது கடைசி பயணத்தை சேலத்திற்கு தொடங்கியது. எல்லோரும் ஓடிப்போய் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்தோம்.அதன் பின் நான் ஸ்வர்ணாம்பிகையை பார்க்கவேயில்லை, கொஞ்ச கொஞ்சமாக எல்லோரும் அதை மறந்து போனார்கள்.

நேற்று எதேச்சியாக You Tube-ல் அன்னக்கிளி பாட்டு பார்த்தேன், அதில் ஸ்வர்ணாம்பிகையும் வந்தது. ரொம்ப நாள் கழித்து அதை மீண்டும் பார்கிறேன்..!!

Sunday, April 15, 2012

ஷாருக்கானும் -இராமேஸ்வரம் மீனவனும்

நாம் இப்போது ஷாருக்கானுக்கும் -இராமேஸ்வரம் மீனவனுக்கும் ஒரு ஒப்பீடு செய்யப்போகிறோம், அதாவது ஒற்றுமை வேற்றுமைகளை காணப்  போகின்றோம். இது என்ன முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சி? என்று நீங்கள் நினைக்கலாம், தொடர்ந்து படித்தால் புரியும்..


 ஷாருக்கான்:
இவர் ஒரு இந்திய குடிமகன். பிரபலமான திரைப்பட நடிகர், செல்வந்தர்.
இவர் நேற்று தனி விமானத்தில் இந்தியாவிலிருந்து நியூ யார்க் அருகில் உள்ள White Field விமான நிலையத்திற்கு வந்து இறங்குகிறார், அவரை குடியுரிமை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து விசாரணை செய்கிறார்கள், இறுதியில் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்படுகிறார். இதே போல அவருக்கு முன்னொரு முறை 2009 இல் நடந்துள்ளது என்றாலும்ஷாருக்கான் அடிக்கடி அமெரிக்காவிற்கு படபிடிப்பிற்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வந்து போய் கொண்டுதான் இருக்கிறார்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இந்திய அரசாங்கம் மிகுந்த கவலையும் கோபமும் கொண்டது, ஒரு இந்திய குடிமகனுக்கு நிகழ்ந்த அவமானமாக கருதியது. இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் கிருஷ்ணா ரஷ்யாவிலிருந்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் , வாஷிங்டன்னிலிருந்து இந்திய தூதர் நிருபமா ராவ் ஒரு படி மேலே சென்று அமெரிக்க அரசாங்கத்தின் விளக்கம் கேட்டு கண்டனத்தை தெரிவித்தார். இறுதில் அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கோரியது.அதை ஏற்றுகொண்ட இந்திய அரசு இது போல இனிமேல் நிகழாவண்ணம் இருக்கவேண்டும் என்று அமெரிக்க அரசை அறிவுறித்தியது.தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியதே ..!!


இராமேஸ்வரம் மீனவன்:

இவரும் ஒரு இந்திய குடி மகன். செல்வந்தர் அல்ல, தினசரி சாப்பாட்டிற்காக கடலில் மீன் பிடிப்பவர்.


இவரும் இவரை சேர்ந்த சொந்தங்களும் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். உடனே இவர் இலங்கை கடற் படையால் சுட்டுக்கொள்ளபடுகின்றார்.இறந்த உடலோடு கரை திரும்பும் இவரது சொந்தங்கள் அழுகிறார்கள், அவரது மனைவியும் குழந்தைகளும் பிணத்தின் மேல் விழுந்து துடிக்கிறார்கள். மீனவர் சமூகம் நீதி கேட்டு போராடுகிறது.


தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசு, தனது குடி மகன் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டாலே கொதித்து எழும் இந்திய அரசு இராமேஸ்வரத்தில் நடப்பவை வேறு ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போல மவுனம் சாதிக்கிறது. நாடாளு மன்றத்தில் இந்த பிரச்சனையை MP -க்கள் பேசும் போது விளக்கம் அளித்த கிருஷ்ணா " மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து விட்டார்கள் , அதனால் இலங்கை கடற் படை சுட்டு விட்டது " என்று விளக்கம் அளிக்கின்றார். இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் இருந்து எந்த ஒரு கண்டனமும் விளக்கமும் கேட்கப் படவில்லை.


வேற்று நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மும்பை நகர மக்களை இஷ்டம் போல சுட்டுக் கொன்றான்,அப்படிப்பட்ட தீவிரவாதியையே உயிரோடு பிடித்து இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடலில் அத்து மீறி எல்லைக்குள் நுழைந்து விட்டார்கள் அதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று இந்திய அரசு இந்திய மீனவன் இறப்பிற்கு விளக்கம் அளிக்கிறது, இலங்கை அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை , இந்திய அரசு எந்த ஒரு விளக்கமும் கேட்டவில்லை.


வழக்கம் போல சினிமா, கிரிக்கெட் மற்றும் மலிவான அரசியல் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக, இந்திய ஊடகங்கள் மீனவன் இறந்த செய்திக்கும் அதற்கான இந்திய அரசின் ஜீரோ நடவடிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.


இப்படி தனது குடிமகன்களில், ஒருவர் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கொதித்து எழுந்தும் இன்னொருவர் சுடப்பட்டு இறந்த பின்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் என்ன நியாயம்? எப்படி இந்திய ஒருமைப் பாட்டின் மீதும் இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வரும்?
ஒருவேளை அந்நிய அரசால் சுட்டுக் கொல்லப்படும் நபர் பிரபலமான நடிகராகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ அல்லது வாய் சவடால் விடும் அரசியல் வாதியாகவோ இருந்தால் தான் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமோ ?





Tuesday, April 3, 2012

டூல் பாக்ஸ்

அந்த screw  வை கழட்டுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது, என் பையனுக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டு காரை அதனுடைய packing இல் இருந்து கழட்டும் முயற்சியில் இருந்தேன். என் மகன் பொறுமை இழந்து கொண்டிருந்தான், அந்த காரை உடனே எடுத்து விளையாட துடித்தான். Laptop bag  இல் வைத்திருக்கும் tool box ஞாபகம் வந்தது, எடுத்து வந்து சரியான screw driver -யை உபயோகித்து உடனே கழட்டிவிட்டேன்.


"You are genius dad..!! "   அமெரிக்க முறைப்படி என்னைப் பாராட்டிவிட்டு மகன் காருடன் விளையாட போய்விட்டான். அந்த சின்ன அழகான tool box யை பார்க்கும் போதெல்லாம் எனக்கு Jeff  ஞாபகம்தான் வரும்.

நானும் Jeff இம் ஒரே ஆபீசில் ஒரே department இல் வேலை பார்த்தாலும் எனக்கு அவரை நன்றாக தெரிய ஆரம்பித்தது ஒரே project இல் இரண்டு பேரும் வேலை பார்க்க ஆரம்பித்த போதுதான்.நல்ல ஆஜானு பாகுவான உடல் வாகு, நான் அவர் பக்கத்தில் நிற்கும் போது குள்ளமாக குட்டிப்பையனாக இருப்பதுபோல உணர்வேன்.நானும் அவரும் project installation -க்காக கொலம்பஸ் போக வேண்டியிருந்தது, கிட்டத்தட்ட 5 மணி நேர கார் பயணம். அவர் drive செய்ய நான் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.

"  you want boring drive or interesting drive..? "   என்றார் Jeff.

" Off course .. interesting drive.." என்றேன் நான்.

உடனே free way  இல் இருந்து வெளியேறி கிராமங்களின் வழியாக செல்லும் பாதையில் செல்ல ஆரம்பித்தார். சின்ன சின்ன கிராமங்கள் வந்து செல்ல பச்சை பசுமையான வயல்களும் அழகான மரங்களும் பார்க்க ரம்மியமாக இருந்தது. எப்போதும் Free way  இல் டிரைவ் செய்து பழக்கப்பட்ட எனக்கு இது வித்தியாசமாக இருந்தது. சாலை ஓரமாக தர்பூசணி விற்கும் இடத்தில் நிறுத்தி தர்பூசணி சாப்பிட்டோம்.

அவருக்கு மிகவும் பிடித்த தொலைக் காட்சி சேனல் Food Network என்றார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறந்த restaurants தனக்கு அத்துப்படி என்றும் மதிய உணவு சாப்பிட போகும் ஊரை முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.

" எந்த ஊரில் சாப்பிட போகிறோம், சொல்லு பார்க்கலாம்? "  Jeff கேட்டார்.

"தெரியலையே..!! "என்றேன்.

" மிக மிக பிரபலமான ஒருவர் அந்த ஊரில் பிறந்தவர்.."  Jeff  clue கொடுத்து கண்டுபிடிக்க சொன்னார்.


கொலம்பஸ் போகும் வழியில் இன்னும் 2 மணி நேரத்தில் வரப்போகும் ஊரில் பிறந்த மிக மிக பிரபலமானவர் யார்?

"Foot ball , basket ball or base ball player..? "

"இல்லை .., சினிமா ,அரசியலும் கிடையாது .."
மிக தெளிவாக எனது அடுத்த யூகத்துக்கும் பதில் சொன்னார். நாமெல்லாம் மண்டையை குடைந்து யோசிப்பது எப்போதும் நேர விரயம் என்பதை என்றைக்கோ உணர்ந்து விட்ட நான்,


"தெரியல.. நீங்களே .. சொல்லுங்கள் .." என்றேன்.


" Wapakoneta.. Neil Armstrong -ன் சொந்த ஊர், அவர் பிறந்த ஊர்.." என்றார்.

"வபகொனிடா.. வாயில நுழைய ரொம்ப கஷ்டம்.." என்றேன்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து வபகொனிடாவை அடைந்தோம். நீல் ஆம்ஸ்ட்ராங் அமைத்திருந்த museum க்கு எதிர்புறம் இருந்த restaurant -ல் சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.நீல்ஆம்ஸ்ட்ராங்யை மாதம் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் அந்த museum -ல் பார்க்கலாம், அவர் கையொப்பம் இட்டு தருவார் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.மதியம் மூன்று மணி போல கொலம்பஸ்யை அடைந்தோம், நேராக client site -க்கு சென்று வேலையை ஆரம்பித்தோம். எங்களுடைய computer server install செய்யப்பட்டிருக்கும் அறைக்கு சென்று பார்த்தோம்.Server சரியாக rack -ல் install செய்யப்படாமல் இருந்தது, சில screw க்கள் tight செய்யப்படாமல் loose ஆக இருந்தன. நான் கையால் அவற்றை tight செய்ய முயற்சித்தேன்.

"Wait.. don't struggle.." என்று சொல்லி அந்த அழகான சின்ன டூல் பாக்ஸ்யை எடுத்து சரியான screw driver யை எடுத்து வேலையை வெகு கச்சிதமாகவும் சீக்கிரமாகவும் முடித்தார் Jeff.

"எப்போதும் ஒரு compact டூல் பாக்ஸ்யை கை வசம் வைத்திருக்க வேண்டும்.." என்றார்.

" அமேரிக்கா வந்த பின்புதான் இந்த மாதிரியான வித விதமான டூல்ஸ் எல்லாம் பார்க்கிறேன்.. இந்தியாவில் சாதாரண fuse போனால் கூட ஆளை கூப் பிட்டு மாற்றுவோம்.." என்றேன்.


அன்று வேலை முடிந்து கிளம்பும்போது மணி இரவு ஏழு ஆகிவிட்டது.

"ஒரு நல்ல restaurant பார்த்து வைத்திருக்கிறேன், Travel சேனலில் காண்பித்து இருக்கிறார்கள்..நேராக அங்கு போய் டின்னெர்யை முடித்துவிடலாம்.."
என்று சொல்லி அந்த restaurant -ன் சிறப்புகளை சொன்னார். அவர் சொல்ல சொல்ல எனக்கு என்னவோ அது ஒத்து வரும் என்று தோன்றவில்லை.அந்தrestaurant   உள்ளே நுழைந்தோம்.
  
ஒரு முழு மாட்டின் தொடை, ஒரு முழு பன்றி மற்றும் இன்னும் பிற மாமிச சமாச்சாரங்கள் ஒரு நீண்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருக்க அதன் கீழே தீ ஜுவாலை திகு திகு வென எரிந்து கொண்டிருந்தது. Jeff  ஒரு தட்டை எடுத்துக் கொண்டு நேராக தீயில் வெந்துகொண்டிருக்கும் பன்றியிடம் போனார், அங்கு நிற்பவனிடம் ஏதோ சொல்ல அவன் அந்த பன்றியின் உடலில் இருந்து ஒரு சின்ன துண்டை வெட்டி அவரது தட்டில் வைத்தான், அதே போல மாட்டின் தொடையும். நான் அங்கு சாப்பிட்டது வெறும் French Fries மட்டும்தான். ஆனால் Jeff  நன்றாக விரும்பி சாப்பிட்டார். அங்கிருந்து வெளியே வந்ததும் நேராக
இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். இது ஐஸ் கிரீம்க்கு மிகவும் popular இடம் என்று சொன்னார். இப்படியாக அடுத்த 3 நாட்களும் வித விதமான இடத்தில் சென்று சாப்பிட்டோம்.கடைசியாக ஊருக்கு திரும்பி வரும்போது சற்று குண்டா கியிருந்தேன்.


அடுத்த வாரம் திங்ககிழமை மதியம் lunch time போல Jeff  என்னிடம் வந்தார்.

"Grand  Rapids -ல் புதுசா ஒரு restaurant திறந்து இருக்கான்,வரியா சாப்பிட போலாம்?" என்றார்.

" இல்லை ..Jeff..நீங்க போயிட்டு வாங்க.. எனக்கு வேற வேலை இருக்கு.." என்றேன்.அவர் மட்டும் தனியாக போனார்.

இரண்டு நாள் கழித்து office வந்தவுடன் என்னுடைய மேனேஜர் என்னுடன் தனியாக பேசவேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
 
" திங்ககிழமை மதியம் லஞ்ச் சாப்பிடJeff போயிருக்கார்.. அவரால சாப்பாட்டை சரியாய் முழுங்க முடியல..டாக்டர் கிட்ட போயிருக்கார்.. செக் பண்ணிட்டு அவருடைய தொண்டையிலிருந்து வயித்துக்கு போற குழாயில் கான்செர் வந்திருப்பதை கண்டுபிடுச்சிருக்காங்க..இப்ப hospital லதான் இருக்கார்"
என்ற அதிர்ச்சியை கொடுத்தார்.
    
சாயங்காலம் Jeff யை பார்க்க போனேன். படுத்து கொண்டு Food Network channel பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தார்.


"Cancer advanced stage -ல் இருக்கு. நாளைக்கு ஹீமோ தெரபி செய்ய போறாங்க.. என்னால எதையும் சாப்பிட முடியல.. liquid  food தான்.."  Jeff  சொல்ல சொல்ல என்னால் தாங்க முடியவில்லை.

நான்கு நாட்கள் கழித்து எங்கள் manger அனைவரையும் meeting -க்கு அழைத்தார்.


" Jeff .. நேற்று இரவு இறந்து விட்டார்..மதியம் உடலை அடக்கம் செய்கிறார்கள்.. நாம் எல்லோரும் செல்கிறோம்.." என்றார்.


எல்லோரும் Jeff -ன் இறுதி சடங்கிற்கு சென்று வந்தோம். மனது பாரமாக இருந்தது. மறு நாள் வழக்கம்போல office -க்கு போனேன். என் மேனேஜர் என்னிடம் வந்தார்,


"Jeff மனைவியிடம் இருந்து e-mail  வந்தது, இதை உன்னிடம் Jeff  கொடுக்கச்  சொன்னாரம்.."
என்று சொல்லி அந்த அழகான சின்ன டூல் பாக்ஸ்யை என்னிடம் நீட்டினார்.
             




Friday, March 16, 2012

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.!!

முன்குறிப்பு :
இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.
இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி 
இந்தியாவின் தேசிய பறவை : மயில்
இந்தியாவின் தேசிய விலங்கு : புலி
இந்தியாவின் தேசிய மொழி : ஹிந்தி.  ???


இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!!  ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!!  As a Indian.. you should learn our national language.. "  என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia  வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.
விக்கிபீடியா சொல்லும் உண்மை 

அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language  ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language  தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5  மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் )  ஹிந்தியை அந்த மாநில Official Language  ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5  மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication
மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.  இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின்  Official Language  இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது.  ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம். 


சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்   பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 வழக்கின் விபரம்:
 " இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது  தண்டனைக்குரியது..!!"


வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி  என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".


  இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:


Times Of India:
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi


The Hindu:
http://www.thehindu.com/news/national/article94695.ece

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித்  தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.


இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .."  நிறையபேர்  ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.

இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.

Friday, March 9, 2012

அகபெல்லா - ஒரு அட்டகாசம்..!!

        என்ன இது? நக்கீரன், ஜூனியர் விகடன் அட்டைப்பட செய்தி போல ஒரு தலைப்பு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பு Grand Rapids -ல் நடந்த பொங்கல் விழாவில் நாங்கள் செய்த அட்டகாசம்.

       சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வரும் பொங்கல் விழாவை எப்படி நடுத்துவது என தீர்மானிக்க வழக்கம்போல கலை ஆர்வம் கொண்ட எங்கள் குழுவைக்  கூட்டினோம். எங்கள் குழுவுக்கென்று சில எழுதப்படாத விதிகள் உள்ளன,

1 ) கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் வாய்க்கு ருசியான ஒரு பதார்த்தத்தை செய்து எடுத்து வரவேண்டும்.

2)  First EATING,  then only MEETING.

ஆக மேற்சொன்ன இந்த கட்டாய விதிகளின் படி அன்று அருமையான சில பல தோசைகளையும் , வடைகளையும் உண்டு களித்து பின் களைத்து meeting  யை  தொடங்கினோம். பொதுவாக கலை நிகழ்ச்சிகள் எப்போதும் வெறும் பாட்டும், டான்சுமகா இருக்கிறது , அதில் புதுமையை புகுத்த வேண்டும் என முடிவெடுத்தோம். ஆளாளுக்கு புதுமைப் பித்தனாக மாறி புதுப்  புது ஐடியாக்களை அள்ளி வீசினோம்.  வில்லுப் பாட்டு, தெருக் கூத்து , சிலம்பாட்டம் என்று.. இன்னும் சொல்லப் போனால் குடுகுடுப்பை, பூம் பூம் மாட்டுக்காரன் வரை சென்று பாரம்பரிய கலைகளை அலசி ஆராய்ந்தோம். அந்த சமயத்தில் ஒருவர் சத்தமாக சொன்ன வார்த்தைதான் "அகபெல்லா".  இந்த வார்த்தையை என் வாழ்க்கையில் நான் முதல் முறையாகக்  கேள்விப்படுகின்றேன். என்னைப் போலவே நிறைய பேருக்கும் இதுவே முதல் முறை என்பது பலரும் கேட்ட கேள்வியில் இருந்து தெரிந்தது.  இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு,
அகபெல்லா (A Cappella):
இது ஒரு இத்தாலி வார்த்தை. இதன் நேரடி அர்த்தம் "தேவாலயத்தின் முறையில்" .அதாவது பாடலை-இசையை எந்தவொரு இசைக்கருவிகளும் இல்லாமல் முற்றிலும் மனித குரலின் வழியாக இசைப்பது அகபெல்லா எனப்படும் . அந்த காலத்தில் இத்தாலியில் தேவாலயங்களில் இசைக் கருவிகள் தடை செய்யப்பட்டவை, எனவே இந்த வகையான பாடும் முறை தோற்றிவிக்கப்பட்டது. மேலும் இதைப் பற்றி விபரம் தேவைப்படுபவர்களுக்கு --> Google.com.

அகபெல்லா வை பொங்கல் விழாவில் அரங்கேற்றுவது என முடிவெடுத்தோம். எங்கள் குழுவில் கர்நாடக இசையில் திறமை வாய்ந்த , குழந்தைகளுக்கு கர்நாடக இசையை கற்றுத்தரும் பள்ளி நடத்தி வரும் ஒருவர் உள்ளார். அவர் இதை முழு பொறுப்பேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.அவர் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் "ஏன் இதயம் நொறுங்கவே.."  பாடலின் முதல் பகுதியுடன் வேறு சிலவற்றியும் இணைத்து கடைசியில் James Bond theme music  -கில் முடியும் படியான ஒன்றை தேர்வு செய்து வைத்திருந்தார். இது போல விஜய் TV  -இல் செய்தார்கள் என கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வெள்ளி இரவும் practice  என முடிவுசெய்யப்பட்டது. 

     முதல் வெள்ளி இரவு practice -க்கு போனேன். சங்கீதம் எந்த அளவுக்கு தெரியும் என்றார்?  அரியக்குடி ராமானுஜ ஐயர், பாலக்காடு மணி ஐயர் போன்ற பெரியவர்களிடம் சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன் , ஆனால் கற்றுக் கொள்ள சந்தர்பம் அமையவில்லை. இதுவரை சங்கீத பயிற்சியை கூட நேராக பார்த்ததில்லை, அலைகள் ஓய்வதில்லை சினிமாவில் பார்த்ததோடு சரி என்று சங்கீதத்தில் பூஜியம் என்பதை சுற்றி வளைத்து சொன்னேன். 

உடனே என்னை percussion  team -இல் சேர்த்துவிட்டார். 

" பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."   என்று கத்திக்கொண்டிருந்த  குரூபுடன் நானும் ஐக்கியமாகி " பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."   சொல்ல ஆரம்பித்தேன்.  
கொஞ்ச நேரத்திலேயே நாக்கு வறண்டு தண்ணி தாகம் எடுத்தது. என்னுடைய  நெருங்கிய நண்பர் கொஞ்சம் சங்கீத ஞானம் உள்ளவர். எப்போது பார்த்தாலும் யேசுதாஸ் மற்றும் கிஷோர் குமார்  பாடல்களையும் முனுமுனுத்துக் கொண்டிருப்பார். அவர் சற்று தள்ளி " தீம்த.. தனனனா.. தீம்தான தனன .."  என்று இன்னொரு குரூபுடன் பாடிக்கொண்டிருந்தார்.அவருடைய முகத்தில் சற்று பெருமை தெரிந்தது, அதாவது என்னைப்  போல " பூம் பூம்" சொல்லாமல் ஒரு படி மேலாக கீர்த்தனை போல " தீம்த.. தனனனா" பாடுகிறாராம். இன்னொரு குரூப் "ஏன் இதயம் நொறுங்கவே.."  என்று பாடலின் முதல் பகுதியை நொறுக்கிக் கொண்டிருந்தது. அன்று practice  முடிந்து வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மறுநாள் இந்தியாவில் இருக்கும் அப்பாவுக்கு வழக்கம் போல week end  phone செய்து பேசினேன்.

" எப்ப பாரு வெளையாட்டு.. ஒழுங்கா பேசுடா.. இப்பதான் M.R. ராதா மாதிரி 
மிமிக்ரி பண்ணிக்கிட்டு..பேசறது ஒன்னும் புரியல.."   என்று மறு முனையில் இருந்து அப்பா திட்டினார்.

"நா.. மிமிக்ரி பண்ணல.. என்னோட குரல் அப்படி ஆயிடிச்சி.. " என்று   M.R. ராதா  குரலிலேயே விளக்கம் கொடுத்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு பாலில் பணங்கல்கண்டு போட்டு குடித்து தொண்டையின் கரகரப்பை போக்கினேன். 

அடுத்த வாரம் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து practice செய்தோம். 
முதல் வரிசை "ஏன் இதயம் நொறுங்கவே.." பாட, இரண்டாம் வரிசை 
" தீம்த.. தனனனா.. தீம்தான தனன .."   பாட மூன்றாம் வரிசை "" பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."    செய்ய வேண்டும்.

"ரெடி 1, 2 , 3.."  என்றவுடன் ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் எனக்கு நேராக இரண்டாம் வரிசையில் இருப்பவர் பாடுவதை நிறுத்திவிட்டு திரும்பினார்.

"கொஞ்சம் பார்த்து பாடுங்க.. எச்சிய நிறைய என்னோட கழுத்துல துப்புரிங்க.."     
என்றார்.

"sorry.. very sorry.."  என்று சொல்லி அவர் துடைத்துக்கொள்ள பேப்பர் நாப்கின் எடுத்துக் கொடுத்தேன். அதன் பின் மெதுவாகப் பாடஆரம்பித்தேன்.

"கடைசி row.. volume ரொம்ப கம்மி.."  என்று பயிற்சியாளரிடம் இருந்து சப்தம் வந்தது. மறுபடியும் சத்தமாக பாட ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் இருப்பவர் மறுபடியும் கழுத்தை  நாப்கின்னால் துடைக்க ஆரம்பித்தார். இப்படியாக அந்த வாரம் எனக்கு தர்மசங்கடமாக முடிந்தது.

அதற்கடுத்த வாரம் practice  ரொம்ப நன்றாக இருந்தது, ஏனென்றால் பாடுவதை
விட்டுவிட்டு பொங்கல் அன்று stage -ல்  என்ன dress போடுவது என்ற முக்கியமான topic யை நண்பரின் மனைவி ஆரம்பிக்க, மிக தீவிரமாக அந்த ஆலோசனை நடந்தது.  கோட் சூட், வேட்டி சட்டை, குர்தா பைஜாமா என்று அனைத்து வகையான டிரஸ்களையும் பரிசீலித்தோம். ஒரு நண்பர் ஜப்பானின் கிமோனோ டிரஸ்யைக் கூட பரிந்துரைத்தார். ஒரு வழியாக budget  காரணங்களால் எளிமையாக கருப்பு பேன்ட் , ப்ளூ ஷர்ட் என்று முடிவு செய்யப்பட்டது.  

அதற்கடுத்த இரண்டு வாரமும் கடுமையான பயிற்சி அளிக்கப் பட்டது. ஸ்ருதி சேரவில்லை என்று ஸ்ருதி பாக்ஸ்யை இரண்டாம் வரிசையில் வைத்து அதே ஸ்ருதில் பாட சொன்னார்கள். அது வேறு "ங்ங்கொய்....." என்று கத்திக்கொண்டிருந்தது.

கடைசியாக நாங்கள் மேடை ஏற வேண்டிய அந்த பொங்கல் திருநாளும் வந்தது. எங்கள் குழுவில் உள்ள ஒருவர் நாங்கள் practice  செய்யும்போது வித விதமாக போட்டோ எடுத்து  ஒரு சின்ன வீடியோ கிளிப்பை உருவாக்கி அதை பொங்கல் விழா ஆரம்பிக்கும் முன் trailer போல ஒளி பரப்பினார். இதனால் வந்திருந்த மக்களிடம் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது, எங்களுக்கு கை கால் ஒதற ஆரம்பித்தது.


"அடுத்து ..A Cappella.. perfomed by Grand Rapids local talents.."   என்று MC announce செய்ய ஒவ்வொரு வரிசையாக மேடை ஏறி எங்கள் position  -இல் நின்றோம்.


"ரெடி..1,2,3.."  என்று சொன்னவுடன் எங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்தோம். பாடி முடித்தவுடன் சில நொடிகளுக்கு வெறும் நிசப்தம், அதன் பின் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.


" எல்லா புகழும் இறைவனுக்கே.!!."   நான் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.  

Sunday, March 4, 2012

Sir, I am suffering from fever..

"Sir, As I am suffering from fever " என்ற இந்த வாக்கியத்தை எவ்வளவு பேர் குருட்டு மனப்பாடம் செய்து ஒரு நாள் விடுமுறை தரும்படி பள்ளி ஆங்கிலத்  தேர்வில் கேட்கப்பட்ட லீவ் லெட்டர் கேள்விக்கு பதில் எழுதினீர்கள் என்று எனக்கு தெரியாது,  ஆனால் என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் குருட்டு மனப்பாடமாக இதை எழுத வைக்கப்பட்டேன் . அந்த மனப்பாடத்தின் பாதிப்பு இன்றளவும் உள்ளது,  இப்போதும் I am suffering  என்றவுடன் from fever என்று அனிச்சையாக கை எழுதுகிறது.

இந்த லீவ் லெட்டர்யை மனப்பாடம் செய்ய வைத்த ஆசிரியர் Suffering என்ற வார்த்தையை விளக்கவும் இல்லை , லீவ் லெட்டர் என்றால் என்ன? அதை எந்த format  இல் எழுத வேண்டும் என்று சொல்லவும் இல்லை.  இது ஆங்கில பாடத்தின் கதி என்றால் , வரலாறு , அறிவியல் அனைத்தும் இதே போலத்தான்.பானிப்பட் போர் சிறு குறிப்பு வரைக, நியூட்டனின் இரண்டாம் விதியை விளக்கு இவையெல்லாம் அந்த வகையில் சேர்ந்தவைதான்.

அனேகமாக எல்லா அரசு பள்ளிகளிலும் படித்த மாணவர்களின் கதி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு தெரியவில்லை,  இருந்தாலும் மனப்பாடம் என்பது பொதுவான ஒரு அம்சமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளது எனபது என் கருத்து. தற்போது நிறைய தனியார் பள்ளிகளில் +1 subject களை எடுக்காமல் நேராக +2 subject களை எடுப்பதாக கேள்விப்படுகிறேன். என்ன கொடுமை இது? அதே போல் கோடை விடுமுறையும் கிடையாது.  நமது தமிழ் நாட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்வி முறை மற்றும் தரம் ஆரோக்கியமாக இல்லை என்பதே எதார்த்தம்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் உள்ள ஒரு பள்ளியையும் அதன் கல்வி முறையையும் இந்தியா போன்ற வளரும் நாட்டின் பள்ளியுடன் ஒப்பிட முடியாது என்றாலும் , சமீபத்தில் நான் இங்குள்ள ஒரு பள்ளியை சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது ,  நான் சின்ன வயதில் இந்த பள்ளியில் படிக்காமல் போய்விட்டேனே என்று. அதுவும் நான் சென்ற பள்ளி முற்றிலும் புதுமையாக கிட்டத்தட்ட நம்முடைய குருகுல கல்வி போல தோன்றியது.  

இந்தப் பள்ளியின் பெயர் "Goodwillie Environmental School" ,  இது Grand  Rapids -க்கு அருகில் Ada  என்ற ஊரில் உள்ளது. Amway Company  யின் Head Quarters -ம் இந்த ஊர் தான்.இந்த பள்ளியும் அரசாங்க பள்ளிதான். காலை 7.45 am  க்கு பள்ளி தொடங்குகிறது. School  Bus அரை மைல் முன்பாகவே மாணவர்களை இறக்கி விட்டு விடுகிறது, அனைவரும் காட்டுப் பாதை வழியாக நடந்து ( வெயிலோ , மழையோ, பனியோ  )  பள்ளியை அடைகிறார்கள்.

திட்டமிட்ட period schedule  எதுவும் இல்லை. அன்று போன பின்தான் என்ன நடத் தப்போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு தெரியும். Photography  யில் பிரபலமான ஒருவர் வருகிறார். ஒரு class யை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு digital camera வை கொடுத்து வெளியில் போய் Photo  எடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். ஒரு மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்கிறார்.

இன்னொரு class மாணவர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் அமர்ந்து,  கேட்கும் பறவை ஒலிகளை இனம் கண்டு தங்கள் குறிப்பில் எழுதுகிறார்கள். இன்னொரு குரூப் மாணவர்கள் சுட்ட செங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய வகுப்புகள் இவர்கள் செய்த செங்கல்லால் கட்டப்பட்டவை என்பதை நம்ப முடியவில்லை.

Capital, dividend , operating cost  ,marketing  போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் எனக்கு  அர்த்தம் தெரிய ஆரம்பிக்கும் போது எனக்கு கழுதை வயதாகி இருந்தது. இந்த பள்ளியில் ஐந்தாவது , ஆறாவது படிக்கும் குழந்தைகள் சேர்ந்து ஒரு சின்ன கோழிப் பண்ணையை (சுமார் முப்பது  கோழிகள் ) நடத்துகிறார்கள். மாணவர்களே கோழிப் பண்ணையின் CEO வாக அவர்களுள் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். Finance, Sales, Budgeting, Operations போன்ற குழுக்களை பிரித்து நிர்வாகம் செய்கிறார்கள். ஒரு brand  பெயரையும் தேர்வு செய்து இங்குள்ள உள்ளூர் கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இந்த வயதிலேயே ஒரு டஜன் முட்டைக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதை தெரிந்து இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகம் என்பதற்கு பல கலைகளை ஒரே இடத்தில் கற்பிக்கும் இடம் என்று பொருள். அதாவது இலக்கியம், அறிவியல் , மருத்துவம் , பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளை உள்ளடிக்கிய ஒரு கல்வி நிறுவனமே  பல்கலைக்கழகம். ஆனால் இன்றைய தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களின் நிலை என்ன?  Dr.MGR Medical University வெறும் தேர்வுகளை நடத்தும் ஒரு நிறுவனமாக உள்ளது. எதாவது மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சி நடைபெறுகிறதா? புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததா?  இல்லை என்பதே இதற்கான பதில். இதே நிலைதான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் - தேர்வு நடத்தும் ஒரு தேர்வாணையம்.

இப்படிப்பட்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்களின் திறமை, எண்ணங்கள், உழைப்பு எப்படி இருக்கும்? அரசியல்வாதிகளும் , கல்வி துறையின் பெரும் பதவிகளில் வகிப்பவர்களும் தங்கள் சுய லாபத்திற்காக அவர்களது புகழ் பாடும் பாடங்களை பாடத்திட்டத்தில் புகுத்துகிறார்கள். இதை படிக்கும் மாணவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால்

" கல்வி சிறந்த தமிழ்நாடு .."  என்ற பாரதியின் வரிகள் நகைப்பிற்குரியதாகிவிடும்..!!!  

இந்த பள்ளியின் இணைய முகவரி: http://fhps.us/goodwillie/

(நன்றி:  புகைப்படங்கள் Google  லிருந்து எடுக்கப்பட்டவை.)


Saturday, March 3, 2012

குடலராஜா -3 (last part).


Mexico City Street.
Taxi சந்து பொந்துக்களில் நுழைவதை பார்த்து பயந்தேன். அதன் பின்தான் புரிந்தது அது தேவையற்ற பயம் என்பதும், driver  traffic  jam -யை தவிர்க்க குறுக்கு வழியில் போகிறார் என்பதும். சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் சுற்றுப்புற சூழல் முற்றிலும் மாறியது. உயர உயரமான நவீன கட்டிடங்கள்,  Audi, Benz, BMW , Renault  car show rooms, வித விதமான restaurants, Shopping Malls என்று அமெரிக்காவின் இன்னொரு நகருக்குள் வந்தது போல தோன்றியது, அந்த இடத்தின் பெயர் Santa Fe என்றும் , மெக்சிகோ சிட்டியின் மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதி என்பதும் பின்னர் தெரிந்து கொண்டேன்.Taxi ஒரு அழகான கட்டிடத்தின் முன் நின்றது, ஹோட்டல் வந்து விட்டதை புரிந்துகொண்டேன்.

       பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததற்காக தாரளமாக tips கொடுத்துவிட்டு  ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நல்ல வசதியான ஹோட்டல், Check in  முடித்துவிட்டு Office  -க்கு கிளம்பினேன். சுமார் நான்கு block  தள்ளிதான் office.
Santa Fe
ஆபீஸ் உள்ளே நுழைந்து நான் சந்திக்க வேண்டிய மேனேஜர்யை சந்தித்து அறிமுகப்படித்துக் கொண்டேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு இன்னொரு அறைக்குப் போனார். அங்கே ஒரு அழகான இளம் பெண் அமர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்த உடன் ஏதோ ஸ்பானிஷ்ல் சொன்னார், அந்த பெண் எழுந்து அவர் கன்னத்தின் அருகில் வந்து "ம்ம்மா"  என்று ஒரு முத்தம் கொடுப்பது போல செய்தாள், பதிலுக்கு அவரும் அவள் கன்னத்தில் "ம்ம்மா"  என்று கொடுத்தார்.  நான் இதை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருக்கும் போதே என் கன்னத்தின் அருகில் வந்து "ம்ம்மா" என்று செய்து விட்டு , அவள் கன்னத்தை காட்டினாள். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் "தேமே"   என்று முழித்துவிட்டு பின் சுதாரித்துக் கொண்டு நானும் "ம்ம்மா" என்று ஒன்று கொடுத்தேன். உடம்பிற்குள் ஒரு உற்சாகமும் , ஒரு freshness  -ம் பிறந்தது போல இருந்தது. சுருக்கமாக சொன்னால் ஹார்லிக்ஸ்ம் , பூட்ஸ்ம் கலந்து குடித்தது போல இருந்தது.

"இவள் பெயர் பவுலா.. from Argentina , இவளுக்கு இங்கிலீஷ்ம் நன்றாக தெரியும், உன்னுடைய team -ஐ இவள் அறிமுகப் படுதுவாள்..உனக்கு ஸ்பானிஷ் புரியாத இடங்களில் இவள் translate செய்து உதவுவாள்.. "  என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

பவுலா சின்ன skirt -ம், tight ஆன T-Shirt -ம், நல்ல உயரமான ஹீல்ஸ்ம்  போட்டிருந்தாள். என்னை நான் work  பண்ண வேண்டிய team -க்கு அறிமுகப்படுத்த அழைத்துக்கொண்டு போனாள். என் Cell Phone சினுங்கியது, எடுத்தால் என் மேனேஜர்,

" ஹாய்.. மெக்ஸிகோ எப்படி இருக்கிறது? பயமாக இருக்கிறதா ..?  Are you safe and comfortable? "  என்றார்.

"   மெக்ஸிகோ சுகமாக இருக்கிறது.. ரொம்ப comfortable ஆக இருக்கிறேன், இப்பொது ஒரு meeting  -க்கு போய்கொண்டிருக்கிறேன், அப்புறமாக பேசலாம்   " என்று சொல்லி மேனேஜர்யை cut செய்தேன் , "நேரம் காலம் தெரியாமல் phone  செய்து கொண்டு.." என்று மேனேஜர்யை மனதிற்குள் திட்டினேன்.

சப்பாத்தி கள்ளி , சைவ உணவு. 
மீச்சிலாடா 
 பவுலா என்னை team members  வுடன் அறிமுகப்படித்திவிட்டாள். இங்கும் பெண்களுக்கு "ம்ம்மா" வும், ஆண்களுக்கு கை குலுக்கலும் செய்யவேண்டி இருந்தது. மதியும் 1 மணி சுமாருக்கு lunch -க்கு கிளம்பினோம். நிறைய பேர் casual ஆக பீர் வாங்கி லஞ்ச் டைம் இல் சாப்பிடுவது ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் குறிப்பாக "மீச்சிலாடா"  (பீருடன் எலுமிச்சை சாரு, உப்பு மற்றும் சில மசாலாக்கள் கலந்தது , ஐஸ் கட்டிகள் போட்டது )  நிறைய சாப்பிட்டார்கள். அமெரிக்காவைப்போல அல்லாமல் லஞ்ச்க்கு ரொம்ப நேரம் செலவிடுகிறார்கள், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து ஆபீசிக்கு வந்தோம். Project Installation  பற்றி பேச ஆரம்பித்தோம்.


முதல் கட்டமாக Guadalajara  என்ற ஊரில் installation  செய்வதாக உத்தேசம்.
ஆகவே என் பேச்சில் அடிக்கடி "குடலராஜாவில் இன்ஸ்டால் செய்யும்போது .." என்று பேசிக்கொண்டிருந்தேன். பவுலா என்னை இடைமறித்து

"குடலராஜா.. குடலராஜா..என்று சொல்கிறாயே .. அது என்ன technology? அதை பற்றி இவர்கள் கேள்விப்பட்டதில்லை என்கிறார்கள்.. நீ கொஞ்சும் அதை விளக்கமாக சொல்லமுடியுமா? "  என்று கேட்டாள்.

அடக் கடவுளே ..!!   இவ்வளளு நேரம் நான் சொன்னது யாருக்கும் புரியவில்லையா.. ?

" நாம் இன்ஸ்டால் செய்யப்போகும் ஊர்தானே குடலராஜா? அதைத்தான் சொல்கிறேன் .. டெக்னாலஜி பேர் எல்லாம் கிடையாது .." என்றேன்.

அவள் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு சொன்னாள்,  ஸ்பானிஷில் J  யை H  ஆகவும் G யை sometimes silent ஆகவும் உபயோகிக்கவேண்டும் என்றாள்.
ஆகவே அந்த ஊரின் பெயர் குடலராஜா அல்ல "க்குவடலஹாரா.."  என்பதை தெரிந்து கொண்டேன். அந்த வார சனி ஞாயிறு அங்கேயே தங்க வேண்டி இருந்தது.  மெக்ஸிகோ சிடியை சுற்றிப்பார்க்க என் team member வுடன் கிளம்பினேன். அவன் Peru  நாட்டை சேர்த்தவன் , ஸ்பானிஷ் உடன்  ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் அவனுடன் சென்றேன்.

நம்மூர் முறுக்கு அல்ல.. இது வேறு..!!  
லோக்கல் டவுன் பஸ்சில் பயணம் செய்தோம். தமிழ்நாட்டில் பிரைவேட் பஸ்சில் வெங்கடாஜலபதி, முருகன் படம்  இருப்பது போல Jesus  படத்தை வைத்து ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். லோக்கல் மெட்ரோ ட்ரெயினிலும் பயணம் செய்தோம். சென்னையை போலவே ட்ரெயினில் நிறைய பேர் எதை எதையோ விற்றுக்கொண்டும்,  பாடிக்கொண்டே பிச்சை எடுப்பதும், உங்கள் மடியில் பிரிண்ட் செய்யப்பட்ட சோகக் கதை சொல்லும் பேப்பர்யை வைத்து பிச்சை எடுப்பதும் சகஜமாக இருந்தது. இந்தியாவைப் போலவே மக்கள் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தார்கள்.  
 
ஒரு இடத்தில வண்ண வண்ண உடை அணிந்த அழகான இளம் பெண்கள் நிறைய பேர் நின்று நடனமாடிக்கொண்டிருந்தார்கள். உடல் ஊனமுற்ற பெண்களும் அவ்வாறே ஆடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.என் நண்பர் என்னவென்று விசாரித்து வந்தார். அவர் வந்து சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது.

எப்படி தமிழ்நாட்டில் வயதுக்கு வரும் இளம் பெண்களை அழகாக அலங்கரித்து சடங்கு செய்வார்களோ, அதே போல மெக்ஸிகோவிலும் செய்வார்களாம். ஆனால் பணக்கார வீட்டு பெண்களுக்கு செய்வது போல ஏழை வீ ட்டு பெண்களுக்கு செய்ய முடிவதில்லை. சிலர் பணம் இல்லாமல் இந்த சடங்கை நிறுத்திவிட்டார்கள். வயதுக்கு வரும் ஏழை பெண்களுக்கு அந்த மன வருத்தம் இருக்கக் கூடாதென்று அரசாங்கமே செலவு செய்து இந்த விழாவை நடத்துவதாகவும் , அதில் கலந்து கொள்ள உடை மற்றும் அனைத்து செலவும்  அரசாங்கமே ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார். அந்த பெண்கள் அனைவரும் கிட்டத்தட்ட நான்கு ஐந்து பஸ்சில் வந்திருந்தார்கள். இந்த இடத்தில நடனமாடி முடித்தபின் சிட்டியின் வேறு இடத்தில சென்று நடனமாடுவார்கள். அதன் பின் இரவு விருந்தும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
          
நம்மூரை போலவே இங்கும் ரோட்டுகடை சாப்பாடு பிரபலம். நாங்களும் ரோட்டுக்கடை சாப்பாட்டை சுவைக்க சென்றோம். ஒரு கடையில் நிறைய கூட்டம், மற்ற கடையிலும் சுமாரான கூட்டம், ஒரு கடையில் மிகவும் குறைவாக கூட்டம். அருகில் சென்று விசாரிக்கும் போதுதான் தெரிந்தது மிகவும் கூட்டமான கடையில் கிடைப்பது ஆட்டு நாக்கு என்பதும் மற்ற கடைகளில் மூளை , ஈரல் என்று பதார்த்தங்களை விற்றுகொண்டிருந்தர்கள் என்பதும். கூட்டமே இல்லாத கடை வெஜிடேரியன் எனபது சொல்லாமலே தெரிந்தது. நான் அங்கு ஓடிவிட்டேன்,என் நண்பர் ஈரலோ , குடலோ எதையோ   
சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார். இங்கு அதிகமாக சமையலில் உபயோகிக்கப்படும் காய் நம்மூரில் சப்பாத்தி கள்ளி என்று சொல்லப்படும் முள்ளு முள்ளாக இருக்குமே அந்த செடியின் பாகம்தான். அதன் முள்ளை எடுத்து விட்டு நன்றாக வேகவைத்து சமைத்து தருகிறார்கள். நன்றாக சுவையாக இருக்கிறது.

Tequila  செய்ய உபயோகப்படும் Agave  தாவரம்.   
பிரபலமான Tequila  Brand.
Guadalajara சாப்பாடு. 
அடுத்த வாரம் க்குவடலஹாராவுக்கு சென்றோம். நம்ப செட்டி நாட்டு பகுதி போல இந்த ஊரும் அதன் சுற்றுப்புறமும் சாப்பாட்டிற்கும், Tequila Drinks-க்கும் , மரியாச்சி இசைக்கும் பிரசித்து பெற்றது. இந்த ஊர் வழக்கப்படி சாப்பாட்டை மண்ணில் செய்யப்பட்ட பாத்திரத்தில் செய்கிறார்கள். Drinks யும் மண் குடுவையில் தருகிறார்கள்.
       
இப்படியாக ஆறு மாதம் ஓடியது. ஒரு வழியாக project -யை முடித்து மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பினேன். கொஞ்ச நாள் கழித்து Boston -க்கு ஆபீஸ் விசயமாக போனேன்.  அன்று இரவு எல்லோரும் dinner சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்,


" When I was having my dinner , this guy was holding a gun and walking towards me.." 
எங்களுடைய Sales Team Manager சொல்லிக் கொண்டிருந்தார்.

"Where was this..? "  புதிதாக எங்கள் ஆபீசில் சேர்த்த அவன் பயத்துடன் கேட்டான்.

"  Sao Paulo,  Brazil "   என்றார்   Sales Team மேனேஜர்.

நான் மனதில் சிரித்துக்கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

(முற்றும்).