Sunday, May 13, 2012

அன்னக்கிளியும் ஸ்வர்ணாம்பிகையும்


அன்னக்கிளி என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இசைஞானி இளையராஜாவின் முதல் படம் என்பதுதான், ஆனால் 1975 -1985 களில் தொளசம்பட்டியில் வாழ்ந்த மக்களுக்கு ஞாபகம் வருவது
ஸ்வர்ணாம்பிகைதான்.சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பிரதான சாலையில், ஓமலூர் தாண்டியதும் கொஞ்ச தூரத்தில் உள் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தூரம் சென்றால் வரும் ஊர்தான் தொளசம்பட்டி.
கிட்டத்தட்ட பாரதிராஜாவின் படங்களில் வருவதுபோல அழகான ரயில்வே ஸ்டேஷன், புளிய மரங்கள் அடர்ந்த நிழலில் ஞாயிற்று கிழமை கூடும் சந்தை, ஊர் நடுவே ஒரு பெருமாள் கோயில், அதைச் சுற்றி சின்ன சின்னதெருக்கள். தினம் ஐந்து முறை சேலத்திலிருந்து வந்து போகும் ரத்னா சினிமா ஸ்டுடியோக்காரருக்கு சொந்தமான ஸ்வர்ணாம்பிகை என்ற ஒரே ஒரு பஸ். என்னதான் "ஸ்வர்ணாம்பிகை" என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தாலும் தொளசம்பட்டி மக்கள் வைத்த பெயர் "நம்மூரு வண்டி".

பச்சையும் வெள்ளையும் பட்டை பட்டையாக அடிக்கப்பட்ட அந்த நம்மூரு வண்டிதான் கைத்தறி நெசவாளர்கள் நெய்த புடவையை விற்க ஈரோடு, சேலம் செல்வதற்கும், பள்ளிக்கூட வாத்தியார்கள் வெளியூரிலிருந்து வந்து போவதற்கும், கல்யாண பண்டிகை நாட்களில் சொந்த பந்தங்கள் வந்து போவதற்கும் உதவியாக இருந்தது. ஸ்வர்ணாம்பிகை இரவு 8 மணிக்கு கடைசி ட்ரிப் சேலத்திலிருந்து வந்தால் மறுநாள் காலை 4.30 மணிக்குத்தான் முதல் ட்ரிப் சேலம் கிளம்பும். வேலை விஷயமாக சேலம் டவுனுக்கு போய்விட்டு திரும்பும்போது பஸ் ஸ்டாண்டில் நிறைய ATC (அன்றைய Anna Transport Corp.) பஸ்களுக்கு நடுவில் ஸ்வர்ணாம்பிகையை பார்த்தவுடன் சொந்த வீட்டுக்கே வந்தது போல சந்தோசம் வரும். மணி இப்ப என்ன? என்று கேட்டால் தொளசம்பட்டியில் நிறைய பேர் நம்மூரு வண்டி போயி கால் மணி ஆவுது என்பார்கள், நாம்தான் யூகித்துக் கொள்ளவேண்டும்.இப்படி அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகிவிட்ட ஸ்வர்ணாம்பிகையை பற்றி ஒரு நாள் அந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது.

அம்பாயிர முதலியார் எப்பொதும் சாயங்காலம் போல எங்கள் வீட்டுப் பக்கம் வந்து கொஞ்ச நேரம் பழங் கதைகளை பேசிவிட்டு போவார். அவர் மேட்டூர் அணை கட்ட வெள்ளைக்காரன் கிட்ட கூலி வேலை பார்த்தது,காமராஜர் மாட்டு வண்டியில வந்து சுதந்திர பிரச்சாரம் செய்தது என்று அவருடைய சின்ன வயதில் நடந்த விஷயங்களை சொல்வார். அவர்தான் முதன் முதலில் அந்த செய்தியை எங்களுக்கு சொன்னார்.

"தெரியுமா சேதி? புதுசா ஒரு படம் வந்திருக்குதே அன்னக்கிளின்னு, சேலத்துல ஓரியண்டல் கொட்டாயில ஓடுதாம்..!! பாட்டெல்லாம் நல்லாயிருக்குது, ரேடியோ பொட்டியில அந்த படத்து பாட்டயேதான் போடறான்..அந்த படத்துல நம்மூரு வண்டியும் நடிச்சு இருக்குதாம்..ரத்னா ஸ்டுடியோலதான் படமே எடுத்தாங்களாம், அவங்க பஸ்தான நம்மூரு வண்டியும், அதுவும் 2 , 3 சீன்ல வருதாம்..!!"

இதை கேள்விப்பட்ட பலபேரும் அன்னக்கிளியில் வரும் ஸ்வர்ணாம்பிகையை பார்க்க சேலத்திற்கு அதே ஸ்வர்ணாம்பிகையில் சென்றோம். படம் ஆரம்பித்த உடனே "நன்றி ரத்னா ஸ்டுடியோ" என்று காண்பித்தார்கள்.எங்களுக்கு நம்பிக்கை வந்தது ஸ்வர்ணாம்பிகையை பார்த்து விடுவோம் என்று. படம் தொடர்ந்து ஓடியது. அம்பாயிர முதலியார் சொன்னது நிஜம்தான், முதன் முதலில் ஊருக்கு வரும் சிவக்குமார் பொட்டியுடன் ஸ்வர்ணாம்பிகை பஸ்ஸில் இருந்து இறங்குவார். படம் பார்த்த எல்லோரும் திருப்தியுடன் ஊர் திரும்பினோம்.பள்ளிக் கூடத்தில் அன்னக்கிளி படம் பார்த்ததும் அதில் வரும் ஸ்வர்ணாம்பிகையை பார்த்ததும் பசங்களிடம் ஒரே பேச்சாக இருந்தது.

சில வருடங்களில் PNR,NT,ABT என்று தனியார் பஸ்கள் தொளசம்பட்டி வழியாக சேலத்திற்கும் மேட்டூருக்கு இடையே போக ஆரம்பித்தன என்றாலும் நம்மூரு வண்டி மீதான பாசம் மக்களுக்கு குறையவில்லை.
அதன்பின் ஒருநாள் தொளசம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் ஒரே கூட்டம், கிட்டத்தட்ட ஊர் மக்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள்.எல்லோரும் எதையோ எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் சிகப்பு கலரில்
வாழை மரமெல்லாம் கட்டி சந்தனமெல்லாம் தெளித்து ஒரு புத்தம் புது பஸ் சர்ர் என்று வந்து நின்றது. அதன் போர்டில் "S2 - சேலம் ஜங்ஷன்" என்றும், பஸ்ஸின் சைடில் "அண்ணா போக்குவரத்து கழகம்" என்றும் எழுதி இருந்தது.

"இதாம்பா டவுன் பஸ்ஸாம்..!!"

'நம்மூரு வண்டியவிட சார்ஜ் கம்மியாம்.."

"எம்ஜியாரு இந்த வண்டிய உட சொன்னாராம்.."

"இரும்பால வழியா சீக்கரம் போயிடுமாம்"

என்று மக்கள் பலரும் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். அந்த பஸ் டிரைவர்க்கும் கண்டக்டர்க்கும் ராஜா மரியாதை கிடைத்தது.எல்லோரும் S2 வில் போக துடித்தார்கள். இன்னும் சில வருடங்களில் நிறைய தனியார் பஸ்களும், அரசு டவுன் பஸ்களும் விடப்பட்டன.ஸ்வர்ணாம்பிகை ஐந்து ட்ரிப்பில் இருந்து மூன்றாக குறைத்துக்கொண்டது. அதன் பெயரும் ஸ்வர்ணாம்பிகையிலிருந்து ரத்னகுமார் என்று மாறியது. ஆனாலும் அதை எல்லோரும் நம்மூரு வண்டி என்றே அழைத்தார்கள். ஒரு நாள் வழக்கம் போலஅம்பாயிர முதலியாரே அந்த செய்தியை சொன்னார்

"வர்ற ஞாயித்து கிழமையோட நம்மூரு வண்டிய நிறுத்தபோறாங்களாம். இன்னம தொளசம்பட்டிக்கு வராதாம், பொட்டிக்கட மாணிக்கம், சிவலிங்கம் இன்னு எல்லாரும் சேந்து ஊர் பொது மக்கள் கிட்ட கையெழுத்து வாங்கி
கலெக்டர்க்கு மனு அனுப்ப போறாங்களாம். ஊருக்கு மொத மொத வந்த வண்டிய நிறுத்த கூடாது அப்படின்னு கேட்டுக போறாங்களாம்.." என்றார்.

அந்த ஞாயித்து கிழமையும் வந்தது, நம்மூரு வண்டி மாலை 4.30 மணிக்கு தனது கடைசி பயணத்தை சேலத்திற்கு தொடங்கியது. எல்லோரும் ஓடிப்போய் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்தோம்.அதன் பின் நான் ஸ்வர்ணாம்பிகையை பார்க்கவேயில்லை, கொஞ்ச கொஞ்சமாக எல்லோரும் அதை மறந்து போனார்கள்.

நேற்று எதேச்சியாக You Tube-ல் அன்னக்கிளி பாட்டு பார்த்தேன், அதில் ஸ்வர்ணாம்பிகையும் வந்தது. ரொம்ப நாள் கழித்து அதை மீண்டும் பார்கிறேன்..!!

4 comments:

  1. உண்மையிலேயே கண்களை பனிக்கசெய்த பதிவு ஒவ்வொரு ஊருக்கும் இது போன்று ஒரு வரலாறு உண்டு ..........நடை இயல்பாகவும் எளிமையாகவும் இருந்தது அருமை !

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..!! ஆம்,பழைய நினைவுகள் எப்போதும் சுகமானவை.

      Delete
  2. மலரும் நினைவுகளை தொகுத்து தந்ததுக்கு நன்றி...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கோவை நேரம்..!! நீங்கள் அடுத்து எந்த ஊர் பதிவை போடப் போகிறீர்கள்? Are you travelling somewhere?

    ReplyDelete