Tuesday, February 19, 2013

எங்கேயும் எப்போதும் ராஜா - ஒரு டொரோண்டோ இசை பயணம்


"Where are you guys going?" 

 "What's happening there?"

இந்த கேள்வியை பலமுறை இந்த பயணத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.நாங்களும் சளைக்காமல் பதிலை சொன்னோம். SUV rent செய்துவிடலாம், பனி,ஐஸ் மழையில் டிரைவ் செய்ய வசதியாக இருக்கும் என்று நண்பர் முரளி ஆலோசனை சொன்னார், அதன்படி அனைத்து விதமான deal மற்றும் discount search-களுக்கு பிறகு Alamo Rental Car கம்பெனியில் SUV rent செய்ய போனோம்.

இடம்: Alamo Rental Car, Grand Rapids, MI.
அங்கிருந்தவர் மேற்சொன்ன இரண்டு கேள்விகளையும் கேட்டார்.

"We are going to Toronto..   "

" Going for music concert.. conducted by famous Indian music composer"
பதிலை சொல்லிவிட்டு அவர் கொடுத்த நீல நிற Nissan Rogue-இல் கனடாவை நோக்கி புறப்பட்டோம்.

இடம்: Port Huron, USA-Canada எல்லை.
கனடா எல்லை பாதுகாப்பு மற்றும் குடியுரிமை அதிகாரி மீண்டும் அதே கேள்வியை கேட்க, அதே பதிலை சொன்னோம்.

"From yesterday I am seeing lot of people going for the concert.. Enjoy your music concert"
என்று சொல்லி பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுத்தார். வாங்கிக்கொண்டு டொராண்டோவை நோக்கி 402-401 ஹைவேயில் Nissan Rogue-வை அதிவேகமாய் செலுத்தினோம்.அன்று இரவு தங்க வேண்டிய ஹோட்டலை அடையும் முன் சரவணபவனில் நிறுத்தி சில பல இட்லி, பரோட்டா, தோசை , வடை மற்றும் மெட்ராஸ் காப்பியை முடித்துக்கொண்டோம்.
Grand Rapids நண்பர் சூர்யாவை அங்கு சந்தித்தோம், அவரும் அவசரமாக சில பல இட்லி, தோசைகளை தள்ளிக்கொண்டிருந்தார்

அடுத்த அரை மணி நேரத்தில்..

இடம்: Holiday Inn, Toronto Downtown.
Check In counter-ல் இருந்த சீன பெண் அதே கேள்வியை வேறு விதமாக கேட்டாள்.

"What's happening..so many Indians here today?"
மீண்டும் அதே பதிலை சொன்னோம்.

"உங்களுக்கு 19-தாவது தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் valid customer ஆக இருப்பதால் இது உங்களுக்கு இலவசம்"
என்று சொல்லி அறைக்கான சாவியுடன் குட்டியூண்டு தண்ணீர் bottle ஒன்றை கொடுத்தாள். வாங்கிக்கொண்டு elevator-யை நோக்கி ஓடினோம்.
நிகழ்சி மாலை 5.30 மணிக்கு ஆரம்பம் ஆவதால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு கிளம்பினோம். மறக்காமல் இந்த நிகழ்சிக்காக நண்பர் மகேஸ்வரன் design செய்து print செய்திருந்த T-Shirt யை அணிந்து கொண்டு கிளம்பினோம்.

இடம்: In front of Holiday Inn, Toronto Downtown.
எதிரில் வந்த டாக்ஸியை கை காட்டி நிறுத்தினோம். மீண்டும் அதே இரண்டு கேள்விகள் கேட்க்கப்பட்டன.

"Roger Center.. for the music concert.." டாக்ஸி டிரைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னோம்.

"ம்ம்ம்.. Is he that famous? There is heavy traffic jam...So many Indians around the Roger center.." டாக்ஸி டிரைவர் சொன்னார்.

" Yes.. His name is Ilayaraja.. all the crowd came just for that one person.." டாக்ஸி டிரைவருக்கு புரியவைத்தோம்.

இடம்: Roger Center, Blue Jay way, Toronto.
மக்கள் கூட்டம் கூட்டமாக கொட்டும் பனி மழையில் வந்துகொண்டிருந்தார்கள். எந்த பக்கம் பார்த்தாலும் traffic jam. ஒரு வழியாக எங்கள் கேட் எண்ணை கண்டுபிடித்து உள்ளே நுழைந்தோம்.Grand Rapids -இல்  இருந்து முதல் நாளே  வந்து  தங்கியிருந்த எங்களூர்  நண்பர்கள்  பலரை சந்தித்தோம். அவர்கள்  இளையராஜா  தங்கியிருந்த  ஹோட்டலில்  தங்கியிருந்ததாகவும் சித்ரா , கார்த்திக், சினேகா  மற்றும் இளையராஜா  அவர்களை  சந்தித்ததாகவும் சொன்னார்கள் . அவர்களுடன்  எடுத்துக்கொண்ட  புகைப்படத்தையும் காட்டினார்கள் . 
 
இனி இசை நிகழ்ச்சி பற்றிய விமர்சனம், முதலில் நிறைகளை பார்ப்போம்.

நிறைகள்:
  • வித்தியாசமான பாடல் தேர்வுக்கு ஒரு சபாஷ்'..!! ,  "வள்ளி வள்ளி என வந்தான்.." , "போட்டு வச்ச காதல் திட்டம்.." , "ஓரம் போ.. ஓரம் போ" , வாத்திய கருவிகள் இல்லாமல் choir-ல் பாடிய பேயை விரட்டும் பாடல் என பாடல் தேர்வு சிறப்பாக இருந்தது.
  • நாயகனில் வரும் "நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே"  பாடல் அதே படத்தில் இடம்பெற்ற  "தென் பாண்டி சீமையிலே.." பாடலுக்கு மாற்றாக  போடப்பட்ட tune என்ற இளையராஜா சொன்ன போது ஆச்சரயமாக இருந்தது. "நிலா அது வானத்து மேலே.. " tune-னை சோகமா, நெகிழ்ச்சியாக பாடிக் காட்டி அசத்தினார். இதே tune மணிரத்னம் கேட்டுக்கொள்ள பின்னர் குதூகல நடனம் ஆடும் பாட்டாக மாற்றப்பட்டது.
  • நட்சத்திர பாடகர்கள் SPB, சித்ரா,கார்த்தி மற்றும் மது பாலகிருஷ்ணன் மிகவும் சிறப்பாக பாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் சிரத்தையாக பயிற்சி  செய்திருப்பது தெரிந்தது. குறிப்பாக SPB "மடை திறந்து.."  என்று ஆரம்பித்தவுடன் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.
  • ஆர்கெஸ்டிரா மற்றும் choir குழுவினர் மிக மிக சிறப்பாக செய்திருந்தனர். மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்கள்..!!
  • பார்திபனால் எல்லோரும் நொந்துபோய் இருக்கும் சமயத்தில் விவேக் மேடை ஏறி மக்களை சிரிக்க வைத்து கலகலப்பை உருவாக்கி நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார்.
  • வந்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் செல்லக்கூடாது, நிறைவாக செல்லவேண்டும் என்ற இளையராஜாவின் சிரத்தையும் அவருடைய வழக்கமான கண்டிப்பும் கண்கூடாக தெரிந்தது.
  • இளையராஜா நாடு விட்டு நாடு வந்து வாழும் உங்களையும் என்னையும் இணைப்பது இந்த இசைதான் என்று பொருள்படும் விதமாக "தென் பாண்டி சீமையிலே.." tune-இல் பாடியபோது நிறைய பேருடைய கண்ணில் கண்ணீர் வழிந்தோடியதை காணமுடிந்தது.

ஒரு பிரமாண்டமான நிகழ்சியை எந்த விதமான குற்றம் குறை இல்லாமல் நடத்த முடியாது. அது எவ்வளவு கடினமான காரியம் என்பது தெரியும். இருந்தாலும் குறைகளை ஒரு பார்வையாளன் என்ற முறையில் சொன்னால்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அவர்கள் எங்கு சொதப்பினார்கள் என்பது தெரியும். எனவே இப்போது..

குறைகள்:

  • கொட்டாம்பட்டி கோயில் திருவிழாவில் நடக்கும் ஆர்கெஸ்டிரா போல இடை இடையே கனேடியன் அரசியல்வாதிகளை மேடை ஏற்றி பேச வைத்தது நிகழ்ச்சி அமைப்பாளர் Trinity Events செய்த மோசமான செய்கை.
  • நிகழ்சி மாலை 7.00 மணிக்குதான் தொடங்கும் என்றால் பின்னர் எதற்காக மாலை 5.30 என்று ticket-ல்  print செய்கிறீர்கள்? அதன் பின்னர் கோட்டு கோபியயும், நித்யா என்ற பெண்ணையும் வைத்துக்கொண்டு 7.00 மணி வரை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதிங்கி நின்றதுதான் மிச்சம். இதுவும் Trinity Events-ன் சொதப்பல்.
  • கிட்டத்தட்ட சுமார் $400  ( டிக்கெட் $150 + ஹோட்டல் தங்குமிடம் + கார் வாடகை  + பெட்ரோல் + சாப்பாடு ) செலவு செய்து வந்தால் ஒரு துறு பிடித்த மடக்கு இரும்பு நாற்காலியில் நான்கு மணி நேரம் உட்கார்ந்து பார்க்க வைத்து விட்டீர்கள். இன்னும் சில பேர் இந்த நிகழ்ச்சிக்காக விமானத்தில் பறந்து வந்திருந்தனர். வந்திருந்த அனைவரும் கால் நீட்ட முடியாமலும், இடுப்பை நெளித்துக் கொண்டும்தான் பார்த்து முடித்தோம்.  Again Trinity Events-ன் சொதப்பல். 
  • Mr.பார்த்திபன் உங்களை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கச் சொன்ன அந்த அறிவாளி யார்? உங்களுக்கு ஒரு விஷயம் சரியாக வரவில்லை என்றால் அதிலிருந்து ஒதிங்கிவிடுங்கள், எங்களை கொல்லாதீர்கள் ..!! At least கொஞ்சமாவது practice செய்துகொண்டு மேடை ஏறுங்கள். 
  • சினேகா, பிரசன்னா எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி நடக்கும் போதுதான் மேடையில் இளையராஜா காலில் விழுந்து அவர்கள் கல்யாணத்திற்கு ஆசி வாங்கினார்கள். அவர் என்ன "இயேசு அழைக்கிறார் .." நிகழ்ச்சியா நடத்துகிறார்? 
  • Mr.ஹரிஹரன், எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஹே ராமில் வரும் "நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.." அதை நீங்கள் இப்படி சொதப்புவீர்கள் என நினைக்கவில்லை. உங்களிடம் பேச வரும் ரசிகர்களிடம் ஏன் நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்த தேவதூதன் போல நடந்து கொள்கிறீர்கள்? சாதாரணமாக  பேசலாமே?

இரவு 11.30 மணிக்கு இளையராஜாவுக்கு கனடா நாட்டின் இளம் தமிழ் பெண் MP ராதிகா சிற்சபை ஈசன் கனடா நாட்டின் கொடியை போர்த்தி முதல் மரியாதை செய்த நிகழ்வோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. மறுநாள் காலை USA-வை நோக்கி  Nissan Rogue 401-ஹைவேயில் பயணித்தது, iPod இல் இருந்து " ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளதை மீட்டுது.." இசை கசிந்துகொண்டிருந்தது. இரண்டு நாள் நெருக்கமான உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு சென்று திரும்பும் மனநிலையில் அமைதியாய் பயணித்துக்கொண்டிருந்தோம்..