Friday, June 1, 2012

இளையராஜாவின் ரசிகன்


இந்த உலகில் பல வகையான ரசிகர்கள், இசை ரசிகர், கிரிக்கெட் ரசிகர், சினிமா ரசிகர், உணவு ரசிகர் இப்படி பல வகை. அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுக்கு ரசிகராக இருந்திருப்போம், பின் மாறி இருப்போம் அல்லது இன்னும் ரசிகராக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் எதற்கு ரசிகராக இருக்கிறாரோ அதை வைத்து அவருடைய ரசனையை எடை போடுகிறோம். உதாரணமாக நடிகர் விஜயகாந்த், ராமராஜன் ரசிகர் என்றால் ஒரு விதமாகவும், உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் டைரக்டர் மணிரத்தினம் ரசிகர் என்று சொல்பவரை வேறு விதமாகவும் நினைக்கிறோம்.ஆனால் இந்த “ரசிகன்” என்ற வார்த்தையில் அதன் ஆழம் தெளிவாக தெரிவதில்லை. தீவிர ரசிகன், வெறியன், உயிர் ரசிகன் போன்ற வார்த்தைகள் மூலம்தான் எவ்வளவு தீவிரமான, ஆழமான ரசிகன் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

  அப்போது சேலத்திற்கு அருகில் இருக்கும் தொளசம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தோம். மாலை சுமார் 6.30 மணி, ஒரு தாய் தன் இடுப்பில் கை குழந்தையை சுமந்து கொண்டு வேர்க்க விருவிருக்க ஓடிகொண்டிருக்கிறார், அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் வேகமா ஓடுகிறார்கள். அந்த குழந்தைக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ஏதும் ஆபத்தா? என்ன அவசரம்? ஒன்றும் புரியவில்லை, பின்னர் தெரிந்தது “நாளை நமதே” எம்ஜியார் படத்தை பார்க்க டூரிங் டாக்கீஸ்க்கு ஓடினார்கள் என்பது. எம்ஜியாருக்கு இருந்த ரத்தத்தின் ரத்தங்களுடைய நடவடிக்கையோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் நான் பார்த்து வியந்த முதல் நிகழ்ச்சி அது.

  அமெரிக்கா வந்த பின்பு சம்பரதாயமாக எல்லோரையும் போல் நியூ யார்க்கில் சுதந்திர தேவி சிலையை (Statue Of Liberty) பார்க்க கப்பலில் போய் கொண்டிருந்தேன். அந்த கப்பல் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகள் கையில் கேமராவுடன் அலைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் அரசியல்வாதி ஒருவர் தூய கதர் ஆடையில் அவருடைய அடி பொடிகள் ஐந்து ஆறு பேருடன் பந்தாவாக அலைந்து கொண்டிருந்தார். வழக்கம்போல நிறைய சீனா டூரிஸ்ட்கள் சிங்-சாங்-சூங் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒருவர் ஜப்பானோ, கொரியாவோ தெரியவில்லை தன் girl friend -யை வித விதமாக Nikon-ல் சுட்டுக்கொண்டிருந்தார்.என்னை பார்த்தவர் நேராக என்னிடம் வந்து “ஹாய்” சொன்னார்.

“நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?” என்றார்
“ஆம்” என்றேன்
“இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்? என்றார்
“தென் இந்தியா, சென்னை அருகில்.. “ என்றேன்
 “நான் dancing king-ன் hard core fan”  என்றார்.
“dancing king..??? “ என்று இழுத்தேன்.
“Mr.ரஜினிகாந்த்” என்றார், சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார்
“அவருடைய படத்தை பார்த்த பிறகு தீவிர ரசிகர்களாகிவிட்டோம் , Mr.ரஜினிகாந்தை நேராக பார்க்கவேண்டும் என்று எனக்கும் என் girl friend -க்கும் மிகவும் ஆசை, ஜப்பானில் இருந்து கிளம்பி நேராக சென்னை வந்தோம், கோடம்பாக்கம் சென்று பார்த்தோம், ஆனால் அப்போது Mr.ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் பார்க்க முடியவில்லை. முத்து படத்தில் bad characheter செய்த நடிகரை (பொன்னம்பலம்) பார்க்க முடிந்தது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம்” என்று சொல்லிவிட்டு அவரும், அவருடைய girl friend என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எனக்கு அன்று Statue Of Liberty யை விட அவர்கள் அதிசயமாக தெரிந்தார்கள்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஆபீஸ் விஷயமாக ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் நகரில் இருந்தேன். அன்று மதியம் வேக வேகமாக எல்லோரும் வேலையை முடித்துவிட்டு அந்த பெரிய conference hall-ல் கூடினார்கள். இஷ்டம் போலஅனைவருக்கும் பீர் வழங்கப்பட்டது. பெரிய டிவியில் ஜெர்மனியும்  கானாவும் (Ghana)  விளையாடும் கால் பந்தாட்டம் தொடங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி வென்றது. வெளியே வந்தால் ஒரே கூச்சல், சப்தம், ஆரவாரம். எங்கு பார்த்தாலும் போலீஸ், எல்லா கார்களிலும் ஜெர்மனி கொடி பறக்க ரசிகர்கள் ஹான்க் செய்து கொண்டு பறந்தார்கள். இத்தனைக்கும் அது உலக கோப்பைக்கான Semi Final-தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் என்னுடைய ஹோட்டலுக்கு வர முடிந்தது. முதன் முதலாக தீவிரமான, உணர்ச்சிமயமான, பெரும் திரளான ரசிகர்களை அன்று பார்த்தேன்.

  Grand Rapids-ல் வசிக்க தொடங்கிய பிறகு அவரை பொதுவான பல party- களில் பார்த்திருக்கிறேன். மிகவும் நேர்த்தியாக உடை அணிந்திருப்பார், மிகவும் அமைதியாக நிதானமாக பேசுவார். புதிதாக வந்திருக்கும் அனைத்து Electronic Gadgets பற்றி தெரிந்து வைத்திருப்பார். Music Systems, Audio Speakers, iPad பற்றிய ஆலோசனைகளை நண்பர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் நெருங்கிய நண்பரானார். ஒரு நாள் வீட்டுக்கு அழைத்தார், சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். வாருங்கள் basement-க்கு போலாம் என்று கூப்பிட்டார். அவருடன் சென்றேன், கீழே studio போல ஒரு ரூம் கட்டியிருக்கிறார். கதவை திறந்து உள்ளே சென்றவுடன் கண்ணில் முதலில் படுவது மிகவும் அழகாக silhouette-ல் frame செய்யப்பட்ட இளையராஜாவின் படம். விதவிதமான Audio Speakers மற்றும் equipment கள்.நான் ஆச்சர்யமாக பார்க்க,
 “ஒரு பாட்டு போடுகிறேன்.. கேளுங்கள், படம் பேரு பட்டா கத்தி பைரவன்” என்றார்.
பட்டா கத்தி பைரவனா? பேரே ஒரு மாதிரி பயமா இருக்கே, என்ன ரசனையோ என்று மனதில் நினைத்துக் கொண்டு
“ஓகே.. கேட்போம்..” என்றேன்.Play பட்டனை அமுக்கினார்,
“எங்கெங்கே செல்லும் என் எண்ணங்கள்..”  SPB யும், ஜானகியும் பாட ஆரம்பித்தார்கள்.
வாவ்..!!! அதை சொல்ல, அந்த அனுபவத்தை விபரிக்க வார்த்தை இல்லை. இந்த பாட்டை இதற்கு முன் கேட்டிருக்கிறேன், ஆனால் அவருடைய அந்த ஆடியோ சிஸ்டத்தில் கேட்கும் சுகமே தனி. ஒரு அதி தீவிரமான இளையராஜாவின் ரசிகரை அன்று கண்டுகொண்டேன். இளையராஜா இசை அமைத்து இன்னும் வெளி வராத படங்களை தவிர அனைத்து படங்களின் ஒரிஜினல் இசை தட்டுக்களும் அவரிடம் உள்ளன. இளையராஜா இசை அமைத்திருந்தால் மட்டுமே அவருடைய ஆடியோ சிஸ்டத்தில் இசைக்கப்படும், இல்லாவிட்டால் அனுமதி கிடையாது. சலங்கை ஒலி, அலைகள் ஓய்வதில்லை, பிரியா, தங்க மகன், How To Name It, நந்தலாலா BGM, நான் கடவுள் என்று தொடர்ந்து பல மணி நேரம் ராஜாவின் இசை ராஜாங்கத்தை நடத்தி காண்பித்தார். அந்த இசை மழையில் நனைந்து, மூழ்கி திளைத்து கடைசியாக வீடு திரும்பும் போது நானும் ஒரு தீவிர இளையராஜா ரசிகனா மாறியிருந்தேன்..!!

2 comments:

  1. பாஸ்,
    செம பதிவு..ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து நடை..
    சென்னையில் ரஜினி படத்தின் முதல் நாள் காட்சியை காண காத்து கிடக்கும் ரசிகர்களை "தீவிர ரசிகன், வெறியன், உயிர் ரசிகன்" என்ற வட்டத்தில் அடைப்பது கொஞ்சம் கஷ்டம தான்...
    ராஜாவை பத்தி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை...நான் பல ராஜவெறியர்களை\ராஜ்பைதியங்களை கடந்து வந்து உள்ளேன்.. நானும் அவர்களில் ஒருவன்.. :)

    ReplyDelete
  2. Nalla padhivu, I still remember the day when I listened to the same song with you in his place, thrilling experience!

    ReplyDelete